இன்றைக்கு எல்லாம் நம்மிடம் யாராவது வறியவர் வந்து உதவி கேட்டால் சில்லறை இல்லை என்று கடந்து செல்கிறோம்
சில்லறை இருந்தால்தான் தர்மம் செய்வோம் சில்லறை இருந்தால்தான் அடுத்தவர் பசிக்கு உணவளிப்போம் என்று சில்லறையாகவே நாமும் இருக்கிறோம் ஆனால் பசி என்று வருபவர்களுக்கு எந்த பலனும் கருதாமல் உணவிடுவதை விட வேறு புண்ணியம் உலகில் இருக்குமா??!!
அதிலும் வறுமையிலும் வறியவர் பசி ஆற்றுவதுதான் இறைவனுக்கு செய்யும் மாகேசுர பூசை என்பதை சரியாக காட்டியவர் இளையான்குடி மாற நாயனார்
தனக்கு மிஞ்சினால் தானமும் தர்மமும் என்ற சமூக சிந்தனையின் தலையில் குட்டி தனக்கு இல்லை என்றாலும் அண்டி வந்தவர் அன்னம் பாலிப்பே முக்கியம் என்ற எண்ணம் தான் எத்தனை உயரியது?!
பெரும் செல்வந்தவராக இருந்தவரிடம் செல்வம் குன்றியது சேர்த்து வைத்த பண்டமும் சுருங்க,
மாடு விற்று மனை விற்று கடன் வாங்கியும் தர்மம் செய்தார்
உள்ள கடன்கள் தக்கன கொண்டு என்கிறார் சேக்கிழார். தன்னால் திருப்பி கொடுக்க முடிந்த கடன் மட்டும் என்பது பொருள் சிறிதளவு நிலமும் கொஞ்சம் விதை நெல்லும் பாக்கி இருக்கிறது
அந்த நெல்லை ஆக்கி திங்கலாம் ஆனால் பசி பொறுத்து வயலில் விதைத்தால் ஒரு மரக்கால் நூறு மரக்காலாக விளையும் தர்மம் குறைவின்றி செய்யலாம என்று வயலில் விதைத்து
அடி வயிறு கட்டி பசியோடு அமர்ந்திருந்த இரவில் மழையும் பேயாட்டம் போடுகிறது...
நலத்தில் அவனை நினைக்கும் நாம் தீதிலும் நினைக்கிறோமா?? என்பதை அறிந்துதானே அவன் அருள் தருவான்!!
ஒரு தபோதனர் வடிவில் மாறிய சிவம் மழையில் நனைந்தது போலவும் குளிர் நடுக்குவது போலவும் பசியில் சோர்வது போலவும் நாடகமாடி அந்த குடிசையின் கதவை தட்ட
நாயனார் ஓடி வந்து கதவு திறந்து அழைக்கிறார்.
பசியாய் உள்ளது சாப்பிட ஏதும் உண்டா என்கிறது சிவம்.
தேவரீர் சிறிது நேரம் உறங்கினால் அதற்குள் தயார் செய்கிறோம் என்கிறார்கள் நாயனாரும் அவரது மனைவியாரும்
சிவம் உறக்க நாடகம் போடுகிறது
நாயனார் மனைவியை பார்க்க என்ன செய்வது பெண்ணே!! என்று கேட்க அந்த அம்மையார்
ஏதிலாரும் இனி தருவார் இல்லை; போதும் வைகிற்று; போமிடம் வேறு இல்லை; தீது செய்வினையேன் என் செய்கேன்??
என்கிறார் பிறகு அவருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது
பகல் வித்திய செந்நெல் மல்லல் நீர்முளை வாரி கொடு வந்தால் உள்ளவாறு அமுது ஆக்கலாம்
என்கிறார் ஒரு விவசாயிக்கு வாழ்நாளில் என்றுமே வரக்கூடாத நிலமை இது
விதை நெல்லை உண்பதே கொடுமை, அதும் விதைத்த நெல்லை சேற்றில் இருந்து எடுப்பது என்பது நினைத்தலும் கொடுமை இந்த சிந்தனை சிவத்திற்காக அவர்களுக்கு தோன்றுகிறது
கூடையை எடுத்து தலையில் வைத்து கொண்டு ஓடுகிறார்
காலினால் தடவிச் சென்று கைகளால் வாரி வெண்முளை நீர் வழி சார்ந்தன கோலி என்ற வரிகளில் சேக்கிழார் சொல்கிறார்:
மழையும் கும்மிருட்டும் கண் மறைக்க, தடவி தடவி சென்ற நாயனார் வயலில் இறங்கி மழை நீரில் ஒதுங்கி மிதக்கும் நெல் மணிகளை அள்ளி கூடையில் போட்டு கொண்டு விரைந்தாராம்.
அந்த அம்மையார் வாசலில் நின்று கொண்டு அந்த கூடையை வாங்கி
நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி வெந்தழல் அடுப்பின் மூட்ட விறகில்லை என்கிறார்
வீட்டுக் கூரை அறுத்து விறாகாக் தருகிறார் நாயனார்
அதனை
அடுப்பின் மாட்டி முளை வித்து பதமுன் கொண்டு வறுத்தபின் அரிசியாக்கி ஆக்கிய உலையில் பெய்து வெறுப்பு இல் இன் அடிசில் ஆக்கி என்கிறார் சேக்கிழார்
நெல் ஒரே இரவில் அவிந்து பின் வறுத்து குத்தி புடைத்து உலைக்கு போய்விடுகிறது அரிசியாக
துரிதமான வேலை
அவ்வம்மை பின் கேட்கிறார்
கறிக்கினி என் செய்கோம்??�என்று
கொள்ளை புறம் முளைத்து கிடக்கும் குப்பை மேணி பொன்னாங்கன்னி கரிசாலை மணித்தக்காளி பசலை என பல்வேறு கீரைகளையும் தன் பாச வேரை பிடுங்குவது போல பிடுங்கி வந்த நாயனார் அந்த கீரைகளை மனைவியிடம் கொடுக்க
கறிகள் ஆய்ந்து புனலிடம் கழுவி தக்க புனித பாத்திரத்தில் கைம்மை வினையால் வேறு வேறு கறியமுது ஆக்கி
தேவரே!! உணவு செய்தாயிற்று அடியவரை அமுது செய்ய எழுப்புங்கள் என்கிறார் அவ்வம்மை.
உறங்கிய அடியவரை நாயனார் போய் எழுப்புகிறார்
அழுந்திய இடருள் நீக்கி அடியனேன் உய்ய என்பால் எழுந்தருள் பெரியோய் ஈண்ட அமுது செய்ய�
என்று
மேலே கையை வைத்து உசுப்பி உறக்கம களைக்க
அந்த அடியவர்
சோதியாய் எழுந்து தோன்ற செழுந்திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றனர்
அடியவர் கண் விழித்து எழும்போது சோதியாய் நிற்கிறார். மாலும் அயனும் காண முடியாது அகன்று நின்ற சோதி
அன்பிற்கு அடங்கி ஒரு குடிசைக்குள் அடியும் முடியும் தோன்ற அடக்கமாய் நிற்கிறது
பின்
சங்கரன் தான் மகிழ்ந்தே ஏலவார் குழலால் தன்னோடும் இடப வாகனனாய் தோன்றிச் சீலமார் பூசை செய்த திருத்தொண்டர் தம்மை நோக்கி
இப்படி சொல்கிறது
அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடு என் பெரும் உலகை எய்தி இன்பமாய் அமர்ந்திரு என்று
சோதியில் சிவம் இடபாருடனாய் தோன்றி அவரை தன்னோடு திருக்கயிலை வருமாறு வரம் தருகிறது
அது பலன் கருதாமல் செய்த தொண்டிற்கு கிடைத்த பரிசு
பசித்தவர் மனதிற்கு இரங்கிய பரிவிற்கான பரிசு
என்று இளையான் குடியார் பாதங்களை தன் தலைமேல் கொள்கிறார் சேக்கிழார் பெருமான் நாமும்தான்🙏🏻
தீபன்ராஜ் வாழ்க்கை
நமசிவாய



No comments:
Post a Comment