பதிவுகள்

Saturday, 15 April 2017

அப்பர் காட்சி படுத்தும் தமிழர் மரணச்சடங்கு



பொதுவாக நம் தமிழர் வீடுகளில் பெருந்துக்கம் என்ற மரணம் நிகழும் போது இறந்தவரின் உடலை குளிப்பாட்டி  ஆடை அணிவித்து துணியால் கை மற்றும் கால்களை கட்டி கிடத்தி வைப்பார்கள் இந்த சடங்கினை வழி கூட்டி விடுதல் என்பார்கள் கிராமப்புறங்களில்

இதன் பிறகுதான் இன்னார் இறந்து விட்டார் என்று உறவினர்களுக்கும் நட்புகளுக்கும் செய்தி அனுப்புவார்கள்

இது இன்றும் தமிழக கிராமங்களில் நடக்கும் நடப்பு

நம் அப்பரடிகள் இந்த பாரம்பரிய சடங்கினைக் கூட ஒரு குறுந்தொகை பாடலில் குறித்துள்ளார்கள்

கையினோடு கால் கட்டி உமரெலாம்

ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர்

பொய்யிலா அரன் புள்ளிருக்கு வேளூர்

மை உலாவிய கண்டனை வாழ்த்துமே

என்பது பாடல்

இது ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள
புள்ளிருக்கு வேளூர் பதிகப்பாடல்

அதாவது உங்கள் உறவின் மக்கள் எல்லாம் உங்கள் கைகால்களை கட்டி எங்கள் ஐயன் இறந்து விட்டார் என்று ஊருக்கு அறிவிக்கும் முன்னர் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்!?

என்ற கருத்தை

கையினோடு கால் கட்டி உமரெலாம்

ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர்

இவ்வரிகளில் கூறும் சுவாமிகள்

பொய்யிலா அரன் புள்ளிருக்கு வேளூர்

மை உலாவிய கண்டனை வாழ்த்துமே

என்றுமே பொய்மை இல்லாத தெய்வமான சிவம் மை போன்ற கருநிற கண்டத்துடன் புள்ளிருக்கு வேளூரில் உறைகிறது

அங்கு போய் தொழுது வாழ்த்துங்கள் என்று நமக்கு அறிவுரை சொல்கிறார்

ஏனென்றால் மனிதப் பிறவி கிடைத்தற்கு அரியது அதனை வீணாக்காமல் இறைவனை ஒருமுறையாவது தொழுங்கள் நமசிவாய என்று சொல்லுங்கள்
என்பது சுவாமிகள் கூறும் கருத்து

 வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி

என்று பாடியவர் அல்லவா அவர்!🙏🏻

இது போன்ற மரணச்சடங்குகளை கூட இறை வழிபாட்டிற்கு உரிய பாடல்களில் இடம்பெறச் செய்து

சைவம் எந்த ஒரு மூடநம்பிக்கைகளும் இடம் அளிக்காத ஒன்று பிறப்பு இறப்பு மேல்கீழ் என்ற பாகுபாடு பார்க்காத கோட்பாடு என்பதை மீண்டும் ஒருமுறை நிறுவும் சுவாமிகள்

நாம் இன்று பின்பற்றும் சடங்கு ஒன்று, அவர்காலத்திலும் பின்பற்ற பட்டுள்ளது என்ற வரலாற்றையும் போகிற போக்கில் பதிவு செய்வது
சுவாரசியம்தான்

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய



அப்பரை விழுங்கிய சிங்கம்


என்கிற தலைப்பில் வரலாற்றின் பிழையான பக்கம் ஒன்றை புரட்டுவோம்🙏🏻

 பொதுவாகவே நம் திருமுறை வரிகள் ஒவ்வொன்றுமே ஆழ்ந்த பொருள் மிக்கவை என்றாலும்

திருமுறைகளில் பல இடங்களில் நமக்கு இன்றும் சரியான பொருள் தெரிவதில்லை

இன்றைய உரையாசிரியர்கள் பலரும் புரியாத பாடல்களுக்கு பெரிய புராணத்தில் சேக்கிழார் சொல்லும் பொருளை வைத்து தங்கள் மனப்பாங்கை வைத்து உரை செய்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க உண்மை,
உண்மையில் சேக்கிழார் ஒரு தீர்க்க தரிசி என்றே கூறலாம்

மூவர் முதலிகளின் ஒவ்வொரு பாடல்களையும் தரவாக ஓதியுணர்ந் த சேக்கிழார், வருங்காலத்தினர்

நிச்சயம் பொருள் விளங்க சிரமப்படுவார்கள் என்று பெரியபுராணத்திலேய சில தேவாரப் பாடல்களுக்கு விளக்கமும் தருவார்

சரி நிற்க; இதை ஏன் இப்போது சொல்கிறோம் என்றால்

திருமுறை வரி ஒன்றை தவறாக அர்த்தம் பண்ணி கொண்ட சிற்பி ஒருவரும் அதனை சரியாக ஆராயாத ஓவியர் ஒருவரும்

தங்கள் மனக்கற்பணையை வரலாறாக்கி சென்று விட்டனர்
என்ற சங்கதிக்கு வரத்தான்

 தஞ்சாவூர் அருகே இருக்கும் பனையமங்கலம் என்னும் ஊரில் ஒரு அப்பர் மடம் சில வரலாற்று அறிஞர்களால் கண்டறியபட்டது

அந்த வரலாற்று அறிஞர்களையும் நம்மையும் ஆச்சரியப் படுத்துவது அங்குள் ஒரு ஓவியம்

சிவலிங்கத்தில் இருந்து புறப்பட்ட சிங்கம் ஒன்று நம் அப்பரடிகளின் தலையை கவ்வி விழுங்குவது போல அந்த ஓவியம் வரையப் பட்டுள்ளது

அப்பர் சுவாமிகள் திருப்புகலூரில் உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே என்று பாடி

சிவலிங்கத்தில் கலந்து விட்டர் என்பது நாடறிந்த உண்மை

இந்த சம்பவத்தை காட்சி படுத்த எண்ணிய சிற்பி அப்பரது பூம்புகலூர் பதிகத்தில் வரும் ஒரு வரியை

தன் கற்பனை திறத்துடன் கையாண்டதே அந்த ஓவிய வெளிப்பாடு

சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன் திருப்புகலூர் மேவிய தேவ தேவே

என்ற வரிகளில் சுவாமிகள் இறைவனை சாவா மூவா சிங்கமே என்று வர்ணிக்க,

இதனை பிடித்து கொண்ட சிற்பி

இறைவன் சிங்கமாகவே வந்து அப்பரது தலையை கவ்வி இழுத்து லிங்கத்துக்குள் ஐக்கியம் செய்து கொள்ளும் படி ஒரு சிலையை திருப்புகலூர் விமானத்தில் வைக்க,

அதனை கண்ட ஒரு பதினைந்தாம் நூற்றாண்டு ஓவியர்

இந்த பதிவுடன் இணைக்கப் பட்டுள்ள அந்த ஓவியத்தை பனைய மங்கலத்தில் வரைந்து வைத்து விட்டார்

 அப்பர்தான் இறைவனை சாவா மூவா சிங்கம் என்கிறார்

அவர் சிவலிங்கத்தில் ஐக்கியமான வரலாறுதான் ஓவியத்தில் காட்டப் படுகிறது என்றாலும்

பதிக வரிகளை மனம் போன போக்கில் புரிந்து செயல்பட்டால் இப்படித்தான் வரலாற்று கோணல்கள் உண்டாகும் என்பதற்கு இந்த ஓவியம் ஒரு சான்று🙏🏻

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய

இறைவனை ப்ளாக் மெயில் செய்யச் சொல்லும் அப்பர்



 என்ன??!! கடவுளை ப்ளாக் மெயில் செய்யனுமா!! சரிதான் என்று சிரிக்காதீர்கள்

கடவுளை பக்தர்கள் ப்ளாக் மெயில் செய்யும் காட்சிகள் நம் தமிழ் சினிமாவில் ஏராளம் உண்டு

கடவுள் தோன்ற வில்லை என்றால் சூலத்தை எடுத்து குத்தி மிரட்டுவது, பீடத்தில் தலையை முட்டிக்கொண்டு அழுவது, உன் சன்னதிக்கே வரமாட்டேன் என்று மிரட்டுவது போன்ற இக்கட்டுகளை ஏற்படுத்தி இறைமையை தோன்ற செய்வது ஒரு ப்ளாக்மெயில்

ஆனால் நம் அப்பர் பெருமான் வேறு விதத்தை நமக்கு சொல்லி தருகிறார்

அது அன்பு வழி, இன்ப வழி, புண்ணிய வழி, அவரும் பின்பற்றிய வழி🙏🏻

 சிவன் எனும் நாமந் தனக்கே உடைய செம்மேனி எம்மான்

அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில் அவன் தனை யான்

பவன் எனு நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால்

இவன் எனைப் பன்னாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே

என்பது பாடல் இது நான்காம் திருமுறையில் உள்ள ஒரு பொதுப்பதிகப் பாடல்


 அதாவது அப்பரடிகளை ஆட்கொண்ட இறைவன் நம்முடைய சிவபெருமான்.அவன் சிவந்த மேணி உடைய செம்மேணி எம்மான் ஆதலால் அவனை சிவன்என்று அழைக்கிறோம்
என்பதைத்தான்

சிவன் எனும் நாமந் தனக்கே உடைய செம்மேனி எம்மான்

அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில்

என்ற வரிகளில் சொல்கிறார் சுவாமிகள்

அந்த செம்மேணி உடைய சிவபெருமானே நம்மை பாவங்களில் இருந்து காக்கும் பெருமான் ஆதலால் பவன் என்ற பெயரால் அவனை இடைவிடாது அழைத்து கொண்டே இருக்க வேண்டும்

எப்போதும் ஐந்தெழுத்துஓதியபடியே இருக்க வேண்டும்

அப்படி ஓதி அழைத்தால் சிவம் என்ன செய்யும்??!!

இவன் நம்மள எப்ப பாத்தாலும் கூப்பிட்டுகிட்டே இருக்கான் நாம நேர்ல போய் நிக்காத வரைக்கும் கூப்டுறத நிறுத்த மாட்டான் என்று எண்ணிய படியே எதிரே வந்து தோன்றும்

என்ற அற்புத கருத்தைத்தான்

 அவன் தனை யான்

பவன் எனு நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் (பல நாள்) அழைத்தால்

இவன் எனைப் பன்னாள்  அழைப்பு ஒழியான் (கூப்பிடுவதை நிறுத்த மாட்டான்) என்று எதிர்ப்படுமே

என்ற வரிகளில் செல்லி நம் சைவத்தில் சுவாரசியத்தை புகுத்தியுள்ளர் அப்பரடிகள்

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய

ஆட்டுக்கார சிவனும் வேட்டைக்கார புலியும்



இது என்னடா?!! தலைப்பு ஆட்டுக்கார சிவம் என்று நிச்சயம் குழம்புவீர்கள்

 ஆனால் அப்படித்தான் நம் சிவம் ஆடு வளர்ப்பதாகவும் அதனை வேட்டையாட ஒரு புலி காத்திருப்பதாகவும் ஒரு பாடல் பாடியிருக்கிறார் காளமேகப் புலவர்

நாட்டுக்குள் ஆட்டுக்கு நாலுகால், ஐயா! நின் ஆட்டுக்கு இரண்டு கால்�

ஆனாலும், நாட்டம் உள்ள சீர் மேவு தில்லைச் சிவனே;

இல் ஆட்டை விட்டுப் போமோ, சொல்வாய்! அப்புலி?

என்பது பாடல்

தில்லையில் உறையும் சிவனே,
உலகத்தில் உள்ள ஆடுகளுக்கு எல்லாம் நாலு கால்கள்தான் ஆனால் உனது ஆட்டிற்கோ இரண்டு கால்தான்

நாலுகால்கள் வைத்து கொண்டு பாய்ந்தோடும் ஆடுகளையே புலி வேட்டையாடி விடும் உன்னுடைய இரண்டு கால் ஆட்டை விட்டு போகுமோ?!

என்பது போல் இருக்கும் இப்பாடலின் பொருளே வேறு

அப்பனே இறைவா!! நீ ஒரு காலை ஊன்றி ஒரு காலை தூக்கி தில்லையில் திருக்கூத்து நடத்துகிறாயே அந்த ஆனந்த தாண்டவத்தில் மயங்கி புலிக்கால் முனிவர் உன்னை விட்டு விலகாது இருக்கிறார்

என்ற கருத்து செறிவினை உடைய பாடலை,


தன் பாணி நக்கலுடன் நான்கு கால் விலங்கான ஆட்டில் துவங்கி

இறைனது ஆட்டத்தை இரண்டுகால் ஆ(ட்)டு என்று குறித்து புலிக்கால் முனிவராம் வியாக்ர பாதரை புலி என்று சுருக்கமாக குறித்து

தமிழின் வல்லமையயும் இறை சிந்தனை நயத்தையும் ஒரு சேர விளங்க வைக்கிறார் புலவர்.

காலை நேரத்தில் கொன்றை மரங்களில் ஏறி மலர் கொய்ய முடியவில்லை பனி வழுக்குகிறது

கால்  வழுக்காமல் மரம் ஏற இறைவா!! என் கால்களை புலியின் கால்கள் போல மாற்று என்று வரம் கேட்ட புண்ணியர் புலிக்கால் முனிவர்

நாமெல்லாம் பூசை செய்து வரம் கேட்பவர்கள் அவர் பூசை செய்வதற்காகவே வரம் கேட்டவர்

இவரால் தான் புலியூர், பெரும்பற்ற புலியூர், புலியூர் சிற்றம்பலம்என்றெல்லாம் நம் தில்லை அழைக்கப் படுகிறது சிதம்பரம் என்பது வெகு சமீபகால பெயர்

புலியூர் என்பதே திருமுறைகளும் கல்வெட்டுகளும் போற்றி பரவும் பெயர்

ஒரு பாடல்; அதில் இலக்கிய நயம் பக்தி நயம் இரண்டையும் புகுத்தி உள்ளார் புலவர்

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய

சிவ குடும்பத்தையே ராக்கிங் செய்த சுந்தரர்



நாயன்மார்களில் தம்பிரான் தோழர் என்ற சிறப்பு பெயரில் அழைக்கப் படுபவர் சுந்தரர் இதற்கு பொருள் இறைவனின் நண்பன் என்பது

இது ஏதோ இலக்கிய நயத்துக்காக சொல்லபட்டது என்று நினைக்காதீர்கள் சுந்தரரின் பதிகங்களை படித்தோமானால் அவர் இறைவன் மீது ஒரு நண்பனாக கொண்டிருந்த உரிமை என்ன என்பதும்

அவர் இறைவனை உரிமையோடு நொந்து கொள்வதும் பொன் பொருள் கேட்டதும் காதலி பற்றி பகிர்ந்து கொண்டதும் அறிந்து வியக்கலாம்

நம்முடைய நட்பு முறைகளை சற்று நினைவு கூறுவோம். கல்லூரி படிக்கும் போது நண்பனின் குடும்பத்தை நம் குடும்பமாகவே எண்ணுவோம் ஆனாலும்

நண்பனிடம் மட்டும் அவனது குடும்ப உறுப்பினர்களின் செய்கைகளை குறித்து நக்கலடித்து சிரித்து பேசி மகிழ்வோம்

ஆக இந்த நட்பிலக்கணம் காலம்காலமாக நம் தமிழ் சமூகத்தின் சொத்தாக இருந்துள்ளது என்பதற்கு சுந்தரர் ஒரு பாடலில் சான்று தருகிறார்

திங்கள் தங்கு சடையின் மேலோர் திரைகள் வந்து புரள வீசும் கங்கையாளேல் வாய் திறவாள்

கணபதியேல் வயிறு தாரி

அங்கை வேலோன் குமரன் பிள்ளை

தேவியார் கோற்றட்டி ஆளார்�

உங்களுக்கு ஆள் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளியுளீரே

என்பது பாடல். இது ஏழாந் திருமுறையில் ஓணகாந்தன் தளி பதிகம்

இறைவன் என்றுமே ஒருவன் தான் என்றாலும் வழிபடுவோர் சிந்தைக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் வெளிப்படுவான் என்பது நம்பிக்கை

அவ்வாறு வெளிப்படும் வடிவங்களை அவனது மனைவி மக்கள் என்று வரையறுத்து வைத்துள்ளதை வைத்து பாடும் சுந்தரர் இப்பாடலில் சொல்கிறார்,

உம் தலையில் நீர் பதுக்கி வைத்திருக்கும் கங்கை உமையவளுக்கு பயந்து எந்நேரமும் வாய் திறவாமல் இருக்கிறாள்

உமது மூத்த பிள்ளை கணபதிக்கு வயிறு ஒன்றுதான் உள்ளது அவனுக்கு அது இன்னும் பெருக்கும் பொருட்டு தின்பதை தவிர வேறு வேலை இல்லை

இரண்டாம் மகன் குமரனோ விளையாட்டு பிள்ளை பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாது

உன் மனைவி எல்லாவற்றிற்கும் மேலாக ,

உன்னையே கோத்துக் கொண்டு  அலைகிறாள் அவளுக்கு வேறு வேலையே இல்லை

நீரோ அடியவர்களுக்கு கேட்ட உடன் அருள் செய்யாதவராக உள்ளீர் (முதற் பாடலில் தனியாக இறைவனை மட்டும் கலாய்த்து உள்ளார்)

இத்தகைய குணம் உடைய உம் குடும்பத்தினருக்கு நாங்கள் எதற்கு ஆள் செய்ய வேண்டும்? என்று
கேட்கிறார் சுந்தரர் பெருமான்

இது அவரது நட்பு திறமும் உரிமையும் என்று கருத வேண்டியுள்ளது

இந்த பதிகம் முழுதுமே இறைவனை இரட்டுற மொழிதலில் வசையாகத்தான் பாடியுள்ளார் நம் சுந்தரர் பெருமான்

உமக்கு அறிவு என்பதே இல்லை என்று நம் நண்பர்களை அடிக்கடி சொல்வோம் அதே போல ஒரு பாடலில்

இறைவனை அறிவில்லாதவர்கள் போல நடந்து கொள்கிறீர் என்கிறார்

நமக்கு திகிலை ஏற்படுத்தும் அந்த வரிகள் இவை

பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி உம்கழல் ஏத்துவார்கள் மற்றோர் பற்றிலர் என்று இரங்கி மதி உடையவர் செய்கை செய்யீர்

எல்லாவற்றிற்கும் மேலாக அவரது நயம் ஒன்று நம்மை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது

உன் அடியவர்கள் துன்பத்தில் துவளும் போது உடனே வந்து காக்காமல் இருக்கின்றீர் அவர்கள் காசு பணம் இல்லாது தவிக்கும் காலத்தில் உதவாமல் இருக்கின்றீர்

பதிலாக உம்மை எங்காவது அடகு வைத்து பொருள் ஈட்டிக் கொள்ளலாம் என்றால் அதற்கும் வழி இல்லை. என்பதை

அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆவற் காலத்து அடிகேள் உம்மை ஒற்றி வைத்திங்கு உண்ணலாமோ ஓண காந்தன் தளியுளீரே
இப்படிக் கேட்கிறார்

இக்காலத்தில் நண்பர்கள் என் தலைய அடமானம் வச்சாவது உன் கஷ்டத்த தீக்குறேன்என்கிறார்களே அது நினைவு வருகிறது

திருமுருகன் பூண்டியில் ஊரைக்காவல் காக்காமல் எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானீரே என்றும்

அடியார்கள் வருந்தி வந்து உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்து போதீரே
என்று இறைவனிடம் முறுக்கிக் கொள்ளவும்

கரைக்கால் முதலையை பிள்ளையை தரச்சொல்லு காலனையே என்று இறைவனுக்கு ஆணையிடவும்

வாளன்ன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே
என்று காதலி பற்றி பேசவும்

ஊன்றுவதோர் கோல் அருளி உளோம் போகீர் என்றானே என்று
 அவன் கருணையை எண்ணி வியக்கவும்

இறைவனை குடும்பத்துடன் ராக்கிங் செய்யவும்  சுந்தரரால் மட்டுமே முடிந்திருக்கிறது அது அவர் பெற்ற உரிமை

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய

இளையான் குடியும் இளைக்காத தொண்டும்


ன்றைக்கு எல்லாம் நம்மிடம் யாராவது வறியவர் வந்து உதவி கேட்டால் சில்லறை இல்லை என்று கடந்து செல்கிறோம்

சில்லறை இருந்தால்தான் தர்மம் செய்வோம் சில்லறை இருந்தால்தான் அடுத்தவர் பசிக்கு உணவளிப்போம் என்று சில்லறையாகவே நாமும் இருக்கிறோம் ஆனால் பசி என்று வருபவர்களுக்கு எந்த பலனும் கருதாமல் உணவிடுவதை விட வேறு புண்ணியம் உலகில் இருக்குமா??!!

அதிலும் வறுமையிலும் வறியவர் பசி ஆற்றுவதுதான் இறைவனுக்கு செய்யும் மாகேசுர பூசை என்பதை சரியாக காட்டியவர் இளையான்குடி மாற நாயனார்

தனக்கு மிஞ்சினால் தானமும் தர்மமும் என்ற சமூக சிந்தனையின் தலையில் குட்டி தனக்கு இல்லை என்றாலும் அண்டி வந்தவர் அன்னம் பாலிப்பே முக்கியம் என்ற எண்ணம் தான் எத்தனை உயரியது?!

பெரும் செல்வந்தவராக இருந்தவரிடம் செல்வம் குன்றியது  சேர்த்து வைத்த பண்டமும் சுருங்க,
மாடு விற்று மனை விற்று கடன் வாங்கியும் தர்மம் செய்தார்

உள்ள கடன்கள் தக்கன கொண்டு என்கிறார் சேக்கிழார். தன்னால் திருப்பி கொடுக்க முடிந்த கடன் மட்டும் என்பது பொருள் சிறிதளவு நிலமும் கொஞ்சம் விதை நெல்லும் பாக்கி இருக்கிறது

அந்த நெல்லை ஆக்கி திங்கலாம் ஆனால் பசி பொறுத்து வயலில் விதைத்தால் ஒரு மரக்கால் நூறு மரக்காலாக விளையும் தர்மம் குறைவின்றி செய்யலாம என்று வயலில் விதைத்து

அடி வயிறு கட்டி பசியோடு அமர்ந்திருந்த  இரவில் மழையும் பேயாட்டம் போடுகிறது...

நலத்தில் அவனை நினைக்கும் நாம் தீதிலும் நினைக்கிறோமா?? என்பதை அறிந்துதானே அவன் அருள் தருவான்!!

ஒரு தபோதனர் வடிவில் மாறிய சிவம் மழையில் நனைந்தது போலவும் குளிர் நடுக்குவது போலவும் பசியில் சோர்வது போலவும் நாடகமாடி அந்த குடிசையின் கதவை தட்ட

நாயனார் ஓடி வந்து கதவு திறந்து அழைக்கிறார்.
பசியாய் உள்ளது சாப்பிட ஏதும் உண்டா என்கிறது சிவம்.

தேவரீர் சிறிது நேரம் உறங்கினால் அதற்குள் தயார் செய்கிறோம் என்கிறார்கள் நாயனாரும் அவரது மனைவியாரும்

சிவம் உறக்க நாடகம் போடுகிறது

நாயனார் மனைவியை பார்க்க என்ன செய்வது பெண்ணே!! என்று கேட்க அந்த அம்மையார்

ஏதிலாரும் இனி தருவார் இல்லை; போதும் வைகிற்று; போமிடம் வேறு இல்லை; தீது செய்வினையேன் என் செய்கேன்??

என்கிறார் பிறகு அவருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது

பகல் வித்திய செந்நெல் மல்லல் நீர்முளை வாரி கொடு வந்தால் உள்ளவாறு அமுது ஆக்கலாம்

என்கிறார் ஒரு விவசாயிக்கு வாழ்நாளில் என்றுமே வரக்கூடாத நிலமை இது

விதை நெல்லை உண்பதே கொடுமை, அதும் விதைத்த நெல்லை சேற்றில் இருந்து எடுப்பது என்பது நினைத்தலும் கொடுமை இந்த சிந்தனை சிவத்திற்காக அவர்களுக்கு தோன்றுகிறது

கூடையை எடுத்து தலையில் வைத்து கொண்டு ஓடுகிறார்

காலினால் தடவிச் சென்று கைகளால் வாரி வெண்முளை நீர் வழி சார்ந்தன கோலி என்ற வரிகளில் சேக்கிழார் சொல்கிறார்:


மழையும் கும்மிருட்டும் கண் மறைக்க, தடவி தடவி சென்ற நாயனார் வயலில் இறங்கி மழை நீரில் ஒதுங்கி மிதக்கும் நெல் மணிகளை அள்ளி கூடையில் போட்டு கொண்டு விரைந்தாராம்.

அந்த அம்மையார் வாசலில் நின்று கொண்டு அந்த கூடையை வாங்கி

நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி வெந்தழல் அடுப்பின் மூட்ட விறகில்லை என்கிறார்

வீட்டுக் கூரை அறுத்து விறாகாக் தருகிறார் நாயனார்
அதனை

அடுப்பின் மாட்டி முளை வித்து பதமுன் கொண்டு வறுத்தபின் அரிசியாக்கி ஆக்கிய உலையில் பெய்து வெறுப்பு இல் இன் அடிசில் ஆக்கி என்கிறார் சேக்கிழார்

நெல் ஒரே இரவில் அவிந்து பின் வறுத்து குத்தி புடைத்து உலைக்கு போய்விடுகிறது அரிசியாக

துரிதமான வேலை

அவ்வம்மை பின் கேட்கிறார்
 கறிக்கினி என் செய்கோம்??�என்று

கொள்ளை புறம் முளைத்து கிடக்கும் குப்பை மேணி பொன்னாங்கன்னி கரிசாலை மணித்தக்காளி பசலை என  பல்வேறு கீரைகளையும் தன் பாச வேரை பிடுங்குவது போல பிடுங்கி வந்த நாயனார் அந்த கீரைகளை மனைவியிடம் கொடுக்க

கறிகள் ஆய்ந்து புனலிடம் கழுவி தக்க புனித பாத்திரத்தில் கைம்மை வினையால் வேறு வேறு கறியமுது ஆக்கி

தேவரே!! உணவு செய்தாயிற்று அடியவரை அமுது செய்ய எழுப்புங்கள் என்கிறார் அவ்வம்மை.

உறங்கிய அடியவரை நாயனார் போய் எழுப்புகிறார்

அழுந்திய இடருள் நீக்கி அடியனேன் உய்ய என்பால் எழுந்தருள் பெரியோய் ஈண்ட அமுது செய்ய

என்று
மேலே கையை வைத்து உசுப்பி உறக்கம களைக்க

அந்த அடியவர்

சோதியாய் எழுந்து தோன்ற செழுந்திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றனர்

அடியவர் கண் விழித்து எழும்போது சோதியாய் நிற்கிறார். மாலும் அயனும் காண முடியாது அகன்று நின்ற சோதி

அன்பிற்கு அடங்கி ஒரு குடிசைக்குள் அடியும் முடியும் தோன்ற அடக்கமாய் நிற்கிறது


பின்

சங்கரன் தான் மகிழ்ந்தே ஏலவார் குழலால் தன்னோடும் இடப வாகனனாய் தோன்றிச் சீலமார் பூசை செய்த திருத்தொண்டர் தம்மை நோக்கி

இப்படி சொல்கிறது

அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடு என் பெரும் உலகை எய்தி இன்பமாய் அமர்ந்திரு என்று

சோதியில் சிவம் இடபாருடனாய் தோன்றி அவரை தன்னோடு திருக்கயிலை வருமாறு வரம் தருகிறது

அது பலன் கருதாமல் செய்த தொண்டிற்கு கிடைத்த பரிசு

பசித்தவர் மனதிற்கு இரங்கிய பரிவிற்கான பரிசு

என்று இளையான் குடியார் பாதங்களை தன் தலைமேல் கொள்கிறார் சேக்கிழார் பெருமான் நாமும்தான்🙏🏻

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய

​மனக்கோயில் செய்த மாமனிதர்​



திருநின்றவூர் திருவள்ளூருக்கு. அது ஆறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி தமிழகம் பல்லவர்களின் சீர்மிகு ஆட்சி கண்டு கொண்டிருக்கும் காலம்

பூசலார் என்னும் மறையவர் இறைவன் பால் மிகுந்த அன்பும் காதலும் கொண்டு அவனுக்கு ஒரு கோயில் கட்ட எண்ணுகிறார்

ஆனால் பொருள் இல்லை ஒரு ஆலயம் செய்வது என்றால் சாதாரணமா?? பெரும் பொருட் செலவில் ஒரு ஆலயம் செய்வது என்பது அவருக்கு  மிகப் பெரிய காரியம்!! ஆனாலும் அவர் சோர்ந்து விடவில்லை

​முகமெலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் அகமலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே​

என்று அப்பரடிகள் பாடி இருக்கிறாரே!!

மனத்தில் உறையும் இறைவனுக்கு மனத்திலேயே கோயில் மனதாலேயே கட்டுவோம் என்று முடிவு செய்கிறார்
பூசலார் நாயனார்.

மனக்கோயில் என்பது ஒரு விந்தையான விஷயம்

மனம் என்பது காற்றை விட வேகமானது அதனால் எதையும் பொறுமையாக செய்ய முடியாது

உதாரணமாக மனதில் ஒரு கோயில் கட்டலாம் என்று நினைத்து பாருங்கள்!!

அடுத்த நொடியே தஞ்சை பெரியக் கோயிலை விட ஒரு பெரியக் கோயிலை மனம் கட்டி விடும்
இதுதான் மனத்தின் வேகம்

அடுத்த நொடிய வேகமாக கட்டியக் கோயில் இங்கு அடுத்த நொடியே காணமலும் போய்விடும் இதுதான் நம்முடைய மனம்

ஆனால் பூசலார் அப்படி கட்டியவர் அல்ல

​புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி ஒன்றும் அங்கு உதவாதாக; 'உணர்வினால்' எடுக்கும் தன்மை​
என்று பாடுகிறார் சேக்கிழார்

பூசலார் இறைவனது கோயிலை கற்பனைக் கோட்டையாக நினைத்து பார்க்கவில்லை
உணர்வால் எடுத்தார்
சிந்தையால் எடுத்தார் மனதால் எடுத்தார்

நம்மால் நினைப்பதற்கும் இயலாத செயல் இது

மனத்தால் கட்ட எண்ணிய கோயிலுக்கு மனதாலேயே பொருள்கள் சேர்க்கிறார்

​மனத்தினால் கருதித் எங்கும் மாநிதி வருந்தி் தேடி​
என்கிறார் சேக்கிழார்

 மனதிலேயே உழைத்து பொருள் தேடுகிறார்

​நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம் திணைத்துனை முதலாத் தேடி சிந்தையால் திரட்டிக் கொண்டார்​

திணையளவு தேவையான பொருளைக்கூட முதலில் மனத்தால் திரட்டுகிறார் பூசலார்.

பிறகு

​சாதனங்களோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடி கங்குற் பேதும் கண் படாது எடுக்கலுற்றார்​

கல் மண் மரங்கள் போன்ற சாதனங்கள் வாங்குகிறார்

கல் தச்சர்களை போய் சந்திக்கிறார்

அவர்களிடம் பேசி இரவு நேரத்தில் கூட கோயில் பணி செய்யும் பொருட்டு ஒப்பந்தம் பேசி
கோயில் கட்டுகிறார்

அதிசயமாக இவை அனைத்தும் மனதிலேயே நிகழ்கின்றன

சிகரந்தானும் முன்னிய முழத்திற் கொண்டு நெடிது நாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவில் செய்தார்​

அதாவது மனக்கோயிலை அவர் ஒரே நாளில் மனதால் நினைத்து கற்பனையாக கட்ட வில்லை

உண்மையாகவே கோயில் கட்ட எத்தணை நாள் ஆகுமோ அத்தனை நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக கோயிலை மனதால் கட்டிக் கொள்கிறார்

அதற்கு கொடி மரம் வைக்கிறார் கோபுரம் கட்டுகிறார் குளம் வெட்டுகிறார்

கோயிலும் சூழ் மதிலும் போக்கி வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து​

கோயிலுக்கு என்னென்ன இன்னும் வேண்டுமோ!! எல்லா வற்றையும் பல நாட்களாக செய்த அதே வேளையில் அவர் மனதால் குடமுழுக்குக்கு குறித்த அதே நாள்

அந்நாட்டை ஆண்ட மன்னவராம்

​காடவர்கோன் கழற்சிங்கர் என்னும் மூன்றாம் நந்தி வர்ம பல்லவரும்​
இறைவனுக்கு ஒரு கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்ய நாள் குறித்துள்ளார்

பெருஞ்செல்வம் அங்கு அழிக்கப் படுகிறது ​காஞ்சி கைலாச நாதர் கோயில்​ என்று வரலாற்றில் பலகாலம் நீடிக்கப் போகும் அந்த கோயிலை

​காடவர் கோன் கச்சிக் கற்றளி எடுத்தும் உற்ற மாடெலாம் சிவனுக்காய் பெருஞ் செல்வம் வகுத்தல்​ செய்கிறார்

அக்கோயிலுக்கும் பூசலாரின் மனக்கோயில் தேதியிலேயே குடமுழுக்கு நாள் குறிக்கப் பட்டுள்ளது

பலகாலம் யாகசாலை பூசைகள் நடந்து முதல் நாள் இரவும பிரமாண்டமாக யாகசாலை பூசைகள் நிகழ்கின்றன

பூசையை முடித்துக் கொண்டு விடிந்தால் கும்பாபிசேகம் காணும் ஆவலுடன் பலவித கற்பனையுடன் மன்னவர் உறங்க செல்கிறார்

நாட மால் அறியாதவர் தாபிக்கும் அந்நாள் முன்னாள்; ஏடலர் கொன்றை வேய்ந்தார் இரவு இடை கனவில் எய்தி​
கும்பாபிசேத்திற்கு முதல் நாள் இரவு இறைவன் இப்படிச் சொல்கிறான்

​நின்றவூர் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம்​

என்னுடைய அன்பனான திருநின்றவூர் பூசலார் எடுத்த கோயிலுக்கு நாளைக்கு நான் போகனும்

நீ இங்கு ஒன்றிய செயலை​ நாளை ஒழிந்து பின் கொள்வாய்​

அதனால் நீ வச்சிருக்குற கும்பாபிசேகத்த வேற ஒரு நாள் வச்சிக்க

​என்று கொன்றை வார் சடையார் கோயில் கொண்டு அருளப் போனார்​

என்று இறைவன் கனவிடை வந்ததை காட்சி செய்கிறார் சேக்கிழார்

இங்கு இறைவனது பெருங்கருணையை பாருங்கள்
பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்தவன் அவன்

உலகம் முழுதும் ஒரே நேரத்தில் பூசனைகள் நிகழ்ந்தாலும் ஏற்கக்கூடிய வல்லமை படைத்த வல்லவன்

அடியவர் ஒருவரின் பெருமையை புலப்படுத்தும் நோக்கில் கனவில் வந்து

​நான் அங்க போறேன் உன் விசேசத்துக்கு வர முடியாது​

என்று தன்னுடைய அளவை, பெருமையை அடியவர்க்காக குறைத்து சொல்லும் பெருமையான இடம் இது.

மன்னவர் துடித்து எழுந்து அன்று இரவே சேனை பரிவாரங்களுடன்

திருநின்றவூர் செல்கிறார்

எங்கே பூசலார்?? எங்கே பூசலார்?? என்று தேடுகிறார்

கும்பாபிசேகத்திற்கான எந்த அடையாளமும் அவ்வூரில் இல்லை

அவ்வூர் மறையவர்கள் அனைவரையும் அழைத்து பூசலார் என்பவர் யார்??

என்று விசாரிக்க அவர் ஒரு பரதேசி மாதிரி திரியக்கூடிய அந்தணர்
ஊருக்கு வெளியே இருப்பார். என்று அழைத்து செல்கிறார்கள்

அந்த மண்டபத்தில் பூசலார் கண்கள் மூடி அமர்ந்திருக்க,

மன்னவர் பக்தியுடன் கரம் கூப்பி அருகே சென்று

தொண்டரை சென்று கண்டு மன்னவன் தொழுது நீர் இங்கு எண் திசையோரும் ஏத்த எடுத்த ஆலயந்தான் யாது??​

என்று வினவுகிறார்

கண்களை திறந்த பூசலார் குழம்புகிறார் மருளுகிறார் நாம் கோயில் கட்டுவது இவருக்கு எப்படித் தெரியும்? என்று எண்ணுகிறார்

இங்கு அண்டர் நாயகரை தாபிக்கும் நாள் இன்று, என்று உம்மைக் கண்டு அடி பணிய வந்தேன்​

நீங்க கட்டிய கோயிலுக்கு இன்னைக்கு குடமுழுக்காமே!!
அதான் உங்களை பணிய வந்தேன்

​கண்ணுதல் அருளப் பெற்றேன்​

நீங்கள் கோயில் கட்டிய செய்தியை முக்கண் உடைய இறைவனே எம் கனவில் சொல்லினார்

என்றார் மன்னவர்

​என்ன??!!😭 இறைவனா?? இறைவனா!! யாம் கோயில் கட்டுவதை கூறினான்??​

​என்னையும் ஒரு பொருட்டாக என் இறைவன ஏற்றுக் கொண்டானா??​

​என் மனக்கோயிலைக் கூட அவன் பெரிதாக எண்ணுகிறானா??!!​

​நாடாளும் மன்னவரை என்னை தேடி வர வைத்திருக்கிறானா??​

என்று அழுகிறார் புரள்கிறார் சென்னிமேல் கரம் கூப்பி வணங்கிறார்

பிறகு தாம் கட்டியது மனக்கோயில் என்பதை விரிவாக விளக்கி மன்னவருக்கு குடமுழுக்கையும் மனதாலேயே தரிசனம் செய்விக்கிறார் பூசலார்

நாடாளும் மன்னவர் அந்த நாயன்மாரது கால்களில் நெடுஞ்சான் கிடையாக வீழ்ந்து வணங்கி வலம் வந்து


தாம் கட்டிய கற்றளிக்கும் குடமுழுக்கு செய்விக்கிறார்

அக்கோயில் கல்வெட்டு ஒன்று மூன்றாம் நந்தி வர்ம பல்லவரை ​கலியுகத்தில் வான் ஒலி கேட்டவன்​

என்று இறைவன் கனவில் வந்ததை வரலாற்றில் பதிந்துள்ளது

நாம் மனதால் நினைக்கும் செயலனைத்தும் இறைவன் அறியாமல் நடக்காது

பெரும் பொருளை விட பெரும் அன்பே இறைவனுக்கு பெரியது.

தொண்டர் பெருமையை புலப் படுத்த இறைவன் எந்த நிலைக்கும் இறங்குவான் என்பதற்கு பூசலார் நாயனாரின் புராணம் இன்றும் சான்றாக அமைந்துள்ளது

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய

Tuesday, 11 April 2017

மண் மருந்து




கவி காளமேகப் புலவருடைய பாடல்களில் நம்பெருமான் ஈசனை அதிகமாக புகழந்து உரிமையுடன் ஏகடியமும் செய்தும் பாடி இருப்பார்

அப்படி ஒரு பாடல் தான் இது

மண்டலத்தில் நாளும் வயித்தியராய்த் தாம் இருந்தும்

கண்ட வினை தீர்க்கில்லார் கண்டீரோ

தொண்டர் விருந்தைப் பார்த்து உண்டருளும் வேளூர் என் நாதர்

மருந்தைப் பார்த்தால் சுத்த மண்

அதாவது புள்ளிருக்கு வேளூர் என்னும் இன்றைய வைத்தீசுவரன் கோயிலில் இறைவன் உலகத்து வியாதிக்கு எல்லாம் மருத்துவனாக திகழ்கிறான்

என்றாலும் நஞ்சு உண்டதால் தன் கண்டம் கருத்துள்ளதை சரி பண்ணி கொள்ளும் வைத்தியம் அவருக்கு தெரியவில்லை போலும் என்று கேலியாக சிரிக்கிறார் புலவர்

மண்டலத்தில் நாளும் வயித்தியராய்த் தாம் இருந்தும்

கண்ட வினை தீர்க்கில்லார் கண்டீரோ
என்கிற வரிகளில்

அத்தகைய வைத்தியனுக்கு வருமானம் என்னவென்றால் தொண்டர்களின் பக்திதான்

சரி அவர் கொடுக்கும் மருந்துதான் என்னவென்று பார்த்தோமானால் வெறும் மண் தானாம்

அதாவது வியாதி குணமாக வேண்டும் அப்பா ஈசா காப்பாத்து என்று இறை சிந்தனையில் எவர் ஒருவர் புள்ளிருக்கு வேளூர் மண்ணை மிதிக்கிறார்களோ அவர்கள் வியாதி உடனே குணமாகும்

என்கிற கருத்தை அமைத்து புலவர்

வேளூர் என் நாதர் மருந்தை பார்த்தால் சுத்த மண்

என்று குறித்து மகிழ்கிறார்

வேளூர் என் நாதர் என்று புலவர் குறிக்கும் வரியில்தான் இறைவன் மீது எத்தனை உரிமை அவருக்கு🙏🏻

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய

தமிழனின் கோயில் கலைப்பேசும் அப்பரடிகள்

கருப்பறியல் பொருப்பனைய கொகுடிகோயில்

 பார்க்கும் இடம் எங்குமொரு நீக்கமற நிறைந்த பரிபூரண ஆனந்தன் இறைவன் என்றாலும் அவனை நியமங்களோடு வழிபடவும் சமயநெறியை போற்றவும் கலைகளை பெருக்கவும் களஞ்சியங்கள் காக்கவும் வரலாற்றை காட்சி படுத்தவும் இயற்கை சீற்றங்களால் குடிமக்கள் பாதியா வண்ணம் தங்க கெள்ளவும் திருவிழாக்கள் நடத்தி களிப்புறவும்

உலகம் முழுதுமே மக்கள்  பலவித கோயில்களை எடுத்து வழிபட்டுள்ளனர் என்றால் அது மிகையில்லை

நம் தமிழகத்தை பொறுத்த வரை கடல்கடந்து தேசம்பிடித்து பெரும் செல்வத்தோடு வாழ்ந்த மன்னவர்கள் கூட தங்கள் இருப்பிடங்களான அரண்மனைகளை காலத்தால் அழியக்கூடியதாக அமைத்துக் கொண்டு இறைவன் உறையும் இடங்களை காலத்தால் அழியாத கற்றளிகளாய் பொலிவு செய்து மகிழ்ந்துள்ளனர்

உண்மையில கோயில் என்பது கோ+இல் என்று பிரிக்கக் கூடிய சொல் ஆகும். எனவே மன்னர்கள் வாழும் இடத்தின் பெயரே கோயில் என்று தமிழகத்தில் வழங்கப் பட்டிருந்தது ஒரு பழைய செய்தி

நம் தமிழ் மக்கள் தெய்வங்கள் உறையும் வழிபாட்டு நிலையங்களை கோட்டம் என்று குறித்து மகிழ்ந்துள்ளமை இலக்கிய செய்தி

இன்றும்
சேயோன் கோட்டம்,
குமரக்கோட்டம் கந்தக்கோட்டம் பத்தினிக்கோட்டம் என்ற சொல்லாட்சிகள் நம்மிடையே நிலவுவது இலக்கிய சான்றின் எச்சம் என்றாலும்

கோயில், நியமம், நகரம் ஆகிய சொற்களாலும் இறைவன் உறையும் தலங்கள் குறிக்கப் பட்டுள்ளது என்பதை

நுதல்விழி நாட்டத்து இமையோன் கோயிலும் உவணச்சேவல் உயர்த்தோன் நியமமும் என்ற சிலப்பதிகார வரிகளால் அறியலாம்

கோயிலை குறிக்க பல சொற்கள் தமிழில் இருந்தாலும் கோயில் என்ற சொல்லே பொதுவானதாக அமைந்து விட்டதை அப்பரடிகளின் பாடல் ஒன்றால் அறிவோம்

அப்பர் சுவாமிகள் தம்முடைய ஒரு பொதுப்பதிகத்தில் இறைவன் உறையும் தலங்களை ஊர், பள்ளி, குடி, துறை, நீர்கறை, என்றெல்லாம் வகைப்படுத்திக் காட்டுவார் அந்த பதிகத்தின் ஒரு பாடலில் நம் தமிழர்களின் விதவிதமான கோயில் கட்டிட வகைகளை நமக்கு பட்டியல் போட்டு பெருமிதப் படுத்துகிறார்

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினொடு எட்டும் மற்றும் கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக்கோயில் இருக்கோதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே

என்பது பாடல்

 இப்பாடலில் சுவாமிகள்
ஆலக்கோயில், இளங்கோயில், கரக்கோயில், ஞாழற்கேயில், கொகுடிக்கோயில், மணிக்கோயில், பெருங்கோயில் என்கிற ஏழுவகை கோயில் கட்டிட முறைகள் தமிழகத்தில் இருந்ததை நமக்கு சொல்கிறார்

இதில் பெருங்கோயில் என்பவை மாடக்கோயில்கள் ஆகும். இதற்கு ஆதாரமாக இன்றும் இதே முறைமையில் அழைக்கப் படும் கோயில்கள் அம்பர் பெருந்திருக்கோயில் நன்னிலத்து பெருங்கோயில் ஆகியவையாம்

பெருங்கோயில்


யானை ஏறா வண்ணம் வெற்று தளத்தின் மீது இருமாடி உயரத்தில் அமைக்கப்படும் இவ்வகை கோயில்களை கோச்செங்கண் சோழன் சிவனுக்காக எழுபத்தி எட்டு என்ற எண்ணிக்கையில் கட்டினார் என்ற வரலாற்றையும் சுவாமிகள் தொட்டு செல்கிறார்

ஆலக்கோயில் என்பது ஆனைக்கோயில் என்பதான் திரிபு என்பார்கள். பொதுவாக கோயில் விமானங்கள் கொட்டாஞ்சியை கவிழ்த்து வைத்த வடிவத்தில் இருக்கும் ஆனால் வெகுசில கோயில்கள் பாதி கூம்பு வடிவமாக அதாவது யானையின் பின்புறம் போன்று அமைத்திருப்பார்கள்

வடமொழியில் கஜபிருஷ்டம் என்று சொல்லப்படும் இவ்வகை ஆலக்கோயில்களின் விமானம் யானைப் படுத்து தூங்கும் போது அதன் பின்புறம் போன்ற தோற்றத்தினை உடையதாதலால் அவை தூங்கானை மாடம் என்றும் குறிப்பார்கள்

பெண்ணாகடத்திலும் செம்பனார்கோயில் அருகிருக்கும் திருவிளையாட்டத்திலும் இவ்வகை கோயிலைக் காணலாம்

ஆனைகோயில்


இளங்கோயில் என்பது தற்காலிக வழிபடு தலமாக இருந்து பின்நாட்களில் நிரந்தர வழிபாட்டுக்கு உரியதாக இருப்பதாம். திருப்பணிகள் வருக்கணக்கில் நடைபெறப் போகும் பட்சத்தில் அருகில் சிறியதாக ஒரு கோயில் செய்து அதில் வழிபடுவார்கள் திருப்பணி முடிந்த பின்னும் அந்த சிறுகோயில் வழிபாட்டில் இருந்தால் அது இளங்கோயில் ஆகிவிடும், மீயச்சூர் இளங்கோயில் என்பது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது குறிக்கத் தக்கது

கரக்கோயில் என்றால் இந்திரன் கரத்தால் செய்தது என்ற புராணக்கதை இருந்தாலும், கரக்கோயில் என்பது தேர் போன்ற அமைப்பினது ஆகும் உயர்ந்த விமானமும் இருபுறமும் சக்கரங்களும் ஆக சமைக்கப் பட்டிருக்கும் வகையினதான கரக்கோயில் தென்கடம்பூரில் மட்டுமே இருக்கிறது. தென்கடம்பை திருக்கரக்கோயிலான் என்பதும் அப்பர் வாக்குதான்

ஞாழற்கோயில் என்பது ஞாழல் என்னும் மரத்தடியில் நிறுவப்பட்ட மண்டபம் ஆகும். ஞாழல்மரம் அடர்ந்த காட்டுக்குள் இருக்குமாம் அதன் அடியில் நிச்சயம் ஒரு சிவலிங்கம் வைத்திருப்பார்களாம் அந்த ஒரு ஞாழல் மரமும் காட்டின் மற்ற மரங்களும் இணைந்து பலகால் உடைய மண்டபமாக காட்சி அளிக்கும் இயற்கை சூழலே இந்நாட்களில் ஆயிரங்கால் மண்டபங்களாக காட்சியளிக்கின்றன என்றாலும் இவ்வகைக் கோயில்கள் தற்போது எங்குமே இல்லை

 இன்றைய திருப்பாதிரிப்புலியூர் என்னும் கடலூரில் முன்நாட்களில் ஞாழற்கோயில் இருந்ததாக கல்வெட்டு ஒன்று கூறுகிறது

கொகுடிக் கோயில் என்பது கொகுடி என்னும் மரத்தால் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்றாலும்

அப்பரடிகள் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக்கோயில் என்று என்று பாடும் கோயில் இன்றைய நாகைமாவட்டம் தலைஞாயிறு என்னும் ஊரில் இருக்கும் கோயில் ஒரு செயற்கை மலையாகவே காட்சி அளிக்கிறது

சீர்காழி மலைக்கோயில் என்பதும் ஒரு செயற்கை மலையான கொகுடிக் கோயில்தான்

 மணிக்கோயில் என்பது மணியை கவிழ்த்து வைத்தாற் போன்ற விமானங்களை உடையக் கோயில்கள் ஆகும் நாம் காணும் இன்றைய பலக்கோயில்களும் இவ்வகைக் கோயில்கள்தான என்றாலும் தஞ்சைப் பெரியக்கோயில் விமானம் மணிக்கோயிலுக்கு சிறந்த எடுத்துக்காட்டு

இவ்வகை விமானங்களை எட்டு ஆறு என்ற எண்ணிக்கை பட்டைகளை மாற்றி திராவிட, வேசர, நாகர என்கிற மூன்று தனிப்பெரும் கட்டிடக்கலைகளாக வளர்ந்து இன்று நாம் காணும் பல கோயில்களையும் கோபுரங்களுமாக செய்து தந்துள்ளனர் நம் பழம்பெரும் மன்னவர்கள்

கோயில்களுக்கு சென்றால் வழிபாட்டுடன் நின்றுவிடாமல் அது என்ன வகைக்கோயில்?? யார் கட்டியது?? எந்த காலத்தியது?? யார் பாடியது?? என்று தேடி அறிந்து மகிழுங்கள் கேயில்கள் வெறும் வழிபாட்டு தலங்கள் அல்ல அவை வரலாற்று பெட்டகங்கள். வரலாறு உங்களுக்கு தெரிந்தால்தான் உங்கள் பிள்ளைகளுக்கு தெரியும் பிள்ளைகளுக்கு தெரிந்தால்தான் வரும் நாட்களிலும் தமிழனின் கலாச்சாரமும் அவனது சைவநெறியும் தலைநிமிர்ந்து நிற்கும்

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய

சைவத்தின் ஹீரோ சுந்தரர்n




றையியல் சார்ந்த விஷயங்கள் என்றாலே குடும்பம் இல்லற தாம்பத்தியம் நட்பு செல்வம் போன்ற வற்றை ஒதுக்கி வைக்க வேண்டும்போ அப்பரடிகள் போல வாதவூரர் போல துறவற நிலையில் இருக்க வேண்டும் என்ற மனப்பான்மைக்கு மாற்றாக நம்முடைய அன்றாட வாழ்வியலிலேயே இறைவனை எப்படி உருகி உருகி வணங்கலாம் என்று சொல்லி தந்தவர் நம் சுந்தர முர்த்தி சுவாமிகள்

நம்பியாரூரர் என்பது பிள்ளைத் திருநாமம் என்றாலும் தம்பிரான் தோழன் என்று சிறப்பிக்கப் படுவார்அவரால் இறைவனிடம் அழுது கேட்டு முறையிடமுடியும்வெறுப்பில் கோபிக்க முடியும்வறுமைக்கு பொருள் கேட்க முடியும்தண்டனைக்கு ஆளாக முடியும்காதலியின் பசிக்கு பொருள் கேட்க முடியும்மற்றவருக்கு உதவிட பரிந்துரை செய்ய முடியும்

 ஒரு சகலகலா வல்லவராக கிட்டதட்ட ஒரு ஹீரோ என்று குறிப்பிட முழுத்தகுதியுடன் இருப்பவர் நம் சுவாமிகள்

 அடியேன் உனக்கு அடிமை என்று முன்பே திருக்கயிலையில் ஆட்பட்டு இன்று நீர் வலிய வந்து அழைக்கும் போது, அடியேன் இல்லை என்று வல்வழக்கிட்டது தகுமோ??

என்று திருமணத்தில் தடுத்தாள வந்த இறைவனை எண்ணி பித்தா பிறைசூடி என்ற பெரிதாம் திருப்பதிகம் பாடிய சுவாமிகளின் பதிகமே

நமக்கு அருச்சனை பாட்டே ஆகும் என்று இறைவனை வியக்க வைத்த
சந்த தமிழ் சுவாமிகளின் பதிகங்கள்

சுந்தர மூர்த்தி சுவாமிகளின் பதிகங்கள் திருப்பாட்டு என்று சிறப்பிக்கப் படுகின்றன. எண்ணற்ற அற்புதங்களை புரிந்துள்ள சுவாமிகளின் தீந்தமிழ்  வரிகளில்
இயற்கை நயமும் சொல்நயமும் வியக்க வைப்பன

மாங்கனிகளின் கனம் தாங்காமல் மாமரம் தாழ கனிகள் தரையில் கிடக்கும் காட்சியை

மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்டம் என்று சுவாமிகள் சிறப்பிப்பது அழகிலும் அழகு

இறைவா நீ்ர் உம்மையே நினைக்கும் அடியார்களின் மனத்தில் உறைவதாக அப்பரடிகள் கூறுவாரே!!

அந்த மனக்கோயில் இருப்பிடம் உமக்கு பிடிக்கவில்லையா அதனால்தான் உம்மை நினைக்கும் அடியவர்களின் துன்பத்தை நீக்காமல் இருக்கின்றீரா??
என்ற நயத்தை

துருத்தி உறைவீர் பழனம் பதியாச் சோற்றுத்துறை ஆள்வீர் இருக்கை திருவாரூரே உடையீர் மனமே எனவேண்டா அருத்தி வைத்த அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வருத்தி வைத்து மறுமை பழித்தால் வாழ்ந்து போதீரே
என்று நமக்காக பரிந்துரைப்பார் சுவாமிகள்🙏🏻

 சுவாமிகளின் வரலாற்றுக்கு துணை நிற்பது அவர்தம் பதிகங்களேதாம்
எண்ணற்ற அகச்சான்றுகள் நிறைந்தவை சுவாமிகளின் பதிகங்கள்

அவரது பதிகங்களை முழுக்க முழுக்க தரவாக படித்து உணர்ந்த பின்னரே சேக்கிழார் பெரிய புராணம் என்னும்  சைவக்கருவூலம் யாத்துள்ளார்

உண்மையில் பெரியபுராணத்தின்  ஹீரோ சுந்தர மூர்த்தி சுவாமிகள்தான்

அவரது சரித்திரத்தினை சொல்ல எழுந்த பெரியபுராணத்தில்
இடையில்தான்
திருத்தொண்டர் புராணங்கள் விவரிக்கப் படுகின்றன

 கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்

தொன் மயிலை வாயிலான்

நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்

போன்ற அவரது திருத்தொண்டத் தொகை வரிகளால்

சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஒரு சரித்திர வல்லுனராக இருந்துள்ளார் என்பதும் திண்ணம்
என்றும் இளமை எப்போதும் மணக்கோலம் என்று இருந்த சுவாமிகளுக்கு வந்த சோதனை

அவர்தம் சிவத்தொண்டை காதலிக்கும் நம் போன்றவர்களுக்கு
சுவையான விஷயம்

காதலிகளுக்காக கயிலாயம் விட்டு வந்தவர்
காதலியால் கண்ணிழந்து
கூட்டோடு கயிலாயம் சென்றவர் நம் சுவாமிகள்

சக்கிலிக்காய் என் கண் கொண்டீர் என்று ஒரு பதிகத்தில் திருவொற்றியூரில் தம் கண் மறைப்பை சுவாமிகள் காட்சி படுத்துவார்

திருவிளம்பூர் என்பது தற்போது பூண்டி நீர் தேக்கம்.
விளம்பூர் என்பது உளோம் போகீர் என்பதன் திரிபு

திருவொற்றியூரில் கண்ணிழந்த சுந்தரர் பெருமான் தட்டு தடுமாறி பல கோயில்களில் வழிபட்டு
வெண்பாக்கம் வந்து குழைவிரவு வடிகாதா கோயில் உளாயோ என்று வினவ

ஊன்றுவதோர் கோலருளி உளோம் போகீர் என்றானே என்று இறைவர் ஊன்று கோல் தந்தருளிய சிறப்பை நமக்கு கடத்தி புல்லரிக்க வைத்துள்ளார் சுவாமிகள்

 கோலை ஊன்றிய படியே கச்சியேகம்பம் வந்து கலங்கி நின்ற சுவாமிகள்
கம்பவாணர் திருமுன்

விண்ணாள்வார் அமுது உண்ண மிக்கபெரு விடம் உண்ட கண்ணாளா!! கடையானேன்

எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள வண்ணா கண்ணளித்து அருள்வாய் என்று வீழ்ந்து வணங்க,

மங்கை தழுவக்குழைந்த இறைவனும் மனம் இறங்கி கண்ணளித்து முலைச்சுவட்டு கோலந்தான் காட்ட ஆலந்தான் உகந்து என்று எடுத்து ஆடிப்பாடினார் நம் சுவாமிகள் என்பார் சகலாகம பண்டிதர் தெய்வ சேக்கிழார் பெருமான்

 கச்சியேகம்பத்தில் இடக்கண் பெற்ற சுவாமிகள் நேரே திருவாரூர் வீதி விடங்கனிடம் வந்து

இன்னுமா எம் பிழை பொறுக்க வில்லை?? நான் வந்திருக்கும் ஊர் திருவாரூர் தானா என்று சந்தேகமாய் உள்ளது ஒற்றைகண்ணால் காண்பது கடினம் மற்றைக்கண் தாரீர் என்பதை

செருந்தி செம்பொன் மலருஞ் சோலை இதுவோ திருவாரூர் பொருந்தித் திருமூலட்டானம்மே இடமாக் கொண்டீரே

இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழாது ஏத்துவோம் வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால்  வாழ்ந்து போதீரே

என்று அழகுத்தமிழில் பாடி வலக்கண்ணும் பெற்று மகிழ்ந்த சுவாமிகள் இறைவனுக்கு ஆணையிட்ட சம்பவம் ஒன்று உள்ளது

இன்றைய கோவை அவினாசியில் சுவாமிகளின் காலத்தில் முதலைக்கு பிள்ளையை பலி கொடுத்த பெற்றோரின் கண்ணீர் துடைக்க

எற்றான் மறக்கேன் என்று துவங்கும் பதிகத்தின் நான்காம் பாடலில்

கரைக்கால் முதலையை பிள்ளைத் தரச்சொல்லு காலனையே

என்று இறைவனுக்கு ஆணை பிறப்பித்து பிள்ளையை உயிர்ப்பித்து நம் தமிழின் வல்லமையை பறை சாற்றியவர் சுவாமிகள்

 திருவையாறின் தென்கரையில் இருந்து கோயிலுக்கு சென்று வழிபட முடியாமல் காவிரி வெள்ளம் தடுக்க

குழகா வாழை குலைதெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவே அழகார் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகேளோ என்று இறைவனை ஓலமிட்டு அழைக்க

பூவிரிக்கும் காவிரி நம்பிகளின் நாவிரிக்கும் தமிழ் கேட்டு விலகி வழிகொடுத்த வரலாறு நம் தமிழ் மொழியின் வல்லமைக்கு மற்றுமொரு சான்று

சுவாமிகள் இறைவனின் விளையாட்டில் கடுப்பாகி இறைவனை கடுப்படித்த பாடல் ஒன்றும் உள்ளது

 திருமுருகன் பூண்டியில் வேடுவர்கள் மூலம் சுவாமிகளின் செல்வத்தை இறைவன் கவர்ந்து செல்ல ஆணையிட பொருளை இழந்த சுவாமிகள்

கொடுகு என்ற துவக்கத்தினை உடைய பதிகத்தில்

நகரத்தை காவல் காக்காமல் நீர் எதற்கு இங்கு உள்ளீர்?? உம்முடைய எருதின் கால் உடைந்து விட்டதா?? அது நன்றாக இருந்தால் இங்கிருந்து போய்விடும் என்று இறைவனை இப்படி கடுமையாகவே பாடுகிறார் சுவாமிகள்

மோறை வேடுவர் கூடிவாழ் முருகன் பூண்டி மாநகர் வாய் ஏறு கால் இற்றது இல்லையாய் விடில் எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானீரே என்பது அவ்வரிகள்

சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில்

பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் என்பார்

அதாவது காசுக்காக மன்னர்களை புகழாமல் வறுமையிலும்
இறைவனை மட்டுமே பாடும் புலவர்கள்.

இந்த அழகிய வரிகளுக்கு உரை செய்த விதமாகவே திருப்புகலூரில்

தம்மையே புகழ்ந்து என்ற துவக்கத்தினை உடைய பதிகம் பாடும் சுவாமிகள்

உலக வாழ்வை வெறுத்து
உடலோடு கையிலாயம் சென்றவர்

இன்று கூண்டோடு கைலாசம் என்று நக்கலாக சொல்கிறோமே
அது கூட்டோடு கயிலாயம் சென்ற நம் சுவாமிகளின் வரலாறுதான்

வேறு எந்த அருளாளர்களும் சொல்லாத திருக்கயிலாயக் காட்சியையும்

அங்கு தேவர்களும் தேவிகளும் ரிஷிகளும் சூழ இறைவன் அமர்ந்திருக்கும் காட்சியை
கண்ணீர் மல்க நமக்கு சுவாமிகள் தரிசனம் செய்விக்கும் பதிகம்
தானெனை முன் படைத்தான் என்ற நொடித்தான் மலைப்பதிகம்

நிச்சயம் சுந்தர மூர்த்தி சுவாமிகள் பற்றி பேச இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது என்றாலும் காலம் கருதி இத்துடன் முடிக்கிறேன்

அவரது மனப்பாங்கையும் அவருக்கும் இறைவர்க்கும் இடைப்பட்ட உறவை அறியவும் சிறந்த சான்று அவர்தம் பதிகங்கள்தான்

ஏழாம் திருமுறையை ஓதி உணருங்கள் இறைவன் உங்களுக்கு இன்னும் நெருக்கமாக தெரிவான்🙏🏻🙂

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய

சிவத்தின் தன்மையும் மீன் குழம்பும்



என்னடா இது வித்யாசமான ஒப்பீடு என்றே நிச்சயம் எண்ணுவீர்கள் ஆனால் உண்மையில் விஷயம் இருக்கிறது

உலகில் இறைவன் தான் சகலமும் என்கிறோம் ஆனால் நம் அப்பரடிகள் இறைவன் என்பது எதுவுமே இல்லை என்கிறார்

பாடலை பாருங்கள்

மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை  மலையல்லை

கடலல்லை வாயுவல்லை எண்ணல்லை எழுத்தல்லை

எரியுமல்லை இரவல்லை பகலல்லை யாவுமல்லை

பெண்ணல்லை ஆணல்லை  பேடுமல்லை பிறிதல்லை

யானாயும் பெரியாய் நீயே உண்ணல்லை நல்லார்க்குத் தீயையல்லை உணர்வரிய ஒற்றியூர் உடையகோவே

இப்பாடல்

ஆறாந்திருமுறையில் ஒற்றியூர் தாண்டகமாக உள்ளது
இதில் சுவாமிகள் சொல்கிறார்

இறைவன் மண் விண் சூரியன் மலை கடல் காற்று எண் எழுத்து தீ இரவு பகல் ஆண் பெண் பேடு ஆகிய எத்தன்மையும் இல்லாதவன் என்று

அதே சமயம் வலிவலம்  தாண்டகத்தில்

பெண்ணவன் காண் ஆணவன் காண் பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண்

அரியவன் காண் அயனானான் காண் எண்ணவன் காண் எழுத்தவன் காண் இன்பக் கேள்வி இசையவன் காண்

இயலவன் காண் எல்லாங் காணுங் கண்ணவன் காண் கருத்தவன் காண் கழிந்தோர் செல்லுங் கதியவன்காண்

மதியவன் காண் கடலேழ் சூழ்ந்த மண்ணவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவனென் மனத்து உளானே
என்கிறார்

அப்பரடிகள் திருவொற்றியூரில் காணும் போது இறைவன் எதுவுமாக தெரியாமல் இருக்கிறான் அதே வலிவலத்தில் பாடும் போது

முன்பு எதுவாகவெல்லாம் இறைவன் இல்லை என்றாரோ அதுவாகவெல்லாம் இருக்கிறான் என்கிறார் சுவாமிகள்

பெண் ஆண் பெரியான் திருமால் பிருமன் எண் எழுத்து  மண் மதி ஆகிய அனைத்துமாக இருக்கிறான்

அப்பரடிகளின் கருத்து முரண்பட்டது போல தோன்றும்

அதை விளக்கத்தான் மீன் குழம்பு வருகிறது இங்கு

கடல் இருக்கிறதே அது உலகத்திற்கே உப்பை வாரி வழங்கினாலும் தன் உவர் தன்மை மாறாமல் இருக்கும் அளவுக்கு உப்பை தன்னகத்தே கொண்டிருந்தாலும்

அதில் வாழும் மீன்கள் உப்பு சுவையுடன் இருப்பதில்லை
மீனை சமைக்கும் போது உப்புப் போட்டுதான் சமைப்போம்

உப்பு நீரிலேயே வாழ்ந்தாலும் மீன் உப்பு சுவை ஏறாமல் உள்ளது

ஆக கடலில் இருந்தாலும் கடல் நீரின் தன்மையில் மீனின் தன்மை மாறுபடுவது இல்லை

அதே போல சிவம் உலகியல் செயல்கள் அனைத்திலும் கலந்து சர்வம் சிவமாய் நின்றாலும் அதன் தன்மை யாதொரு உலக செயல்களோடும் ஒப்பிடக்கூடியதாக இருக்காது

 உலகில் ஆணாக பெண்ணாக பேடியாக விண்ணாக மண்ணாக கடலாக காற்றாக எண்ணாக எழுத்தாக இசையாக இயலாக யாதுமாகவும் சிவமே நிற்கிறது என்றாலும்

இதில் எந்த  தன்மையும இறைவனது நிலையான தன்மை இல்லை என்பதே

அப்பரின் அரிய முடிபு🙏🏻

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய

மூடநம்பிக்கை இல்லாத தமிழர் சமயமும் அதன் இயற்கை நேயமும்�



 திருமுறைகளின் சொல்லாடல்களுடன் நம் இன்றைய வாழ்வியல்களை பொருத்தி பாக்கும் போது நாம் எத்தகைய கீழான நம்பிக்கைகளில் வாழ்ந்து வருகிறோம் என்பது புரியும்

சைவத்தை பொறுத்த வரை அது காட்டும் இறைவன் இன்பம் துன்பம் இனிமை கசப்பு வெறுப்பு காதல் புனிதம் அசுத்தம்
என்று எதற்கும் பொருந்தாத அப்பாற் பட்ட ஒரு சக்தியாக இருக்கிறான் என்று சொல்லும்

இதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளாமல் பல இடங்களில் இறைவன் முன் அனைத்தும் சமம் என்பதை அறியாமல் ஆட்டம் போடுகிறோம்

நறுமண மலர்களை சூடிக்கொள்ளும் இறைவன் எலும்புகளையும் கட்டி மாலையாக போட்டுக் கொள்கிறான்

செத்தார் எலும்பை அணிந்தான் திருக்கேதீச்சரத்தானே என்று சுந்தரர் பாடுவார்

என்பலால் கலனும் இல்லை எருதலால் ஏறல் இல்லை என்று அப்பர் பாடுவார்

இறைவனுக்கு பூமாலை இனிமை தருவதில்லை அதுபோல் எலும்பு மாலை துன்பம் தருவது இல்லை இரண்டுமே சமம்தான்

 இன்றைய காலங்களில் சாலையில் போகும் போது சவ ஊர்வலம் வந்தாலே முகம் சுளிப்பவர்கள் ஏராளம், பிண ஊர்வலத்தில் கீழே கிடக்கும் பூக்களை மிதித்தாலே குளிப்பவர்கள் இருக்கிறார்கள்

கோயில் வாயிலை பிண ஊர்வலம் கடக்கும் போது மேளம் கொட்டுவதை நிறுத்தி செல்வார்கள், கடவுளுக்கு சாவு துக்கம் இதெல்லாம் ஆகாது என்று முடிவு செய்து விட்டார்கள் போலும்.

ஆனால் நம் சைவத்தில் இறப்பும் பிறப்பும் சமம் இரண்டுமே வாழ்வின் முக்கியமான நகர்வுகள் என்பதை தெளிவாக உணர்ந்ததால் தான்
சுந்தர மூர்த்தி சுவாமிகளால்

ஓவு நாள்
உணர்வு அழியும் நாள்
உயிர்
போகும் நாள்
"உயர் பாடை" மேல்
காவுநாள்

என்று பாடையை குறித்து பதிகம் பாட முடிந்துள்ளது

 சகுனம் பார்க்கும் போது பல்லி சொல்லுதல் காகம் கரைதல் ஆந்தை அலறல் என்று எல்லாத்துக்கும் ஒரு காரணம் வைத்திருப்போம்
அதிலும் இந்த ஆந்தையை கண்டாலே பலருக்கு குலை நடுங்கும்

ஆந்தை அலறினால் மரணம் வரும் என்று நம்புவார்கள் அது எந்த திசையில் இருந்து அலறுகிறது என்று எண்ணுவார்கள்



ஆனால் சுந்தர மூர்த்தி சுவாமிகளும் அவர் காட்டும் சைவமும் உயிர்களிடத்தில் அன்பு செய்யக் கூடியதாக அனைத்தும் இறைவன் முன் சமம் என்று சொல்லக்கூடியதாகவும் உள்ளது
என்பதற்கு  சான்றாக அமைந்த வரி இது

பொத்தில் ஆந்தைகள் பாட்டறா புகலூரைப் பாடுமின் புலவீர்காள்

என்கிறார்

எத்தனையோ இடங்களில் மயில் ஆடும் குயில் பாடும் அன்னம் மேயும் மந்திகள் களிப்புறும் ஊர்களை குறிக்கிறார் சுவாமிகள்

மேற்கண்ட வரியை பார்க்கும் போது அந்த விலங்குகள் குறித்த வர்ணனை கவிநயத்துக்காக சேர்க்கப் பட்டவை அல்ல அவ்வூரில் தெரிந்த உண்மைக்காட்சி என்பது புரியும்

அழகுக்காக கவிநயத்துக்காக பாடுபவர்கள் யாரும் நிச்சயம் ஆந்தைகள் அலறுவதை குறிக்க மாட்டார்கள் குறித்ததும் இல்லை

ஆனால் நம் சுவாமிகள் பாடிய திருமுறை ஆந்தையின் அலறலைக்கூட பாட்டு என்கிறது

இறைவனது படைப்பில் சில விலங்குகள் புனிதமற்றவை என்று சொல்லும் சமய நெறிகளுக்கு இடையில் இயற்கையின் பரிணாமத்தில் அனைத்து உயிரினங்களும் சமம் என்பதை இதைவிட அழகாக வேறு எதனில் குறிக்க முடியும்?!

 குயிலின் குரல் பாடல் என்றால் புகலூரில் சுவாமிகளின் காதில் எங்கிருந்தோ வந்து விழுந்த ஆந்தையின் அலறல் ஓசையும் பாடலாக கேட்டுள்ளது

காரணம் தமிழனின் இயற்கை நேசிப்பு
இறைவனின் முன்பு  அனைத்தும் சமம் என்ற உணர்வு நம் திருமுறைகளின் மாண்பு
என்று சொன்னால் மிகையில்லை

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய

மாணிக்கவாசகர் காலம் சில ஆய்வு தகவல்கள்


 பொதுவாக நம் தமிழக சரித்திர ஆய்வுகள் மன்னர்களின் ஆட்சிக்காலம் கல்வெட்டுகள் செப்பேடுகள் இதனைக் கொண்டும் யாருடைய காலம் அறியப்பட வேண்டுமோ அவரது பாடல்கள் குறிக்கும் செய்திகள் மற்றும் மன்னர்கள் ஆகிய தகவல்களை வைத்தே முடிவாகிறது ஆதலால்

நாம் மாணிக்கவாசகர் பற்றி ஒருவாறு அறியும் முன்னம்

பாண்டிய மன்னர்கள் சிலரது ஆட்சி காலம் குறித்து அறிதல் மிக அவசியம் ஆர்வத்துடன் படித்தால் நிச்சயம் இது உங்களுக்கு புதியதாகவே இருக்கும்

கிபி 860 என்னும் காலகட்டம் பிற்கால சோழர்கள் தஞ்சையை பிடிக்கும் முந்தய காலகட்டம் பல்லவர்கள் வடக்கிலும் பாண்டியர்கள் தெற்கிலும் ஆட்சி புரிந்த காலகட்டம்

இக்கால வரலாற்றை சொல்லும் இலங்கையின் மகாவம்சம் என்னும் நூல்

ஸ்ரீ மாறவல்லபன் என்னும் பாண்டி மன்னரது மகன் சிங்களர்களின் துணையுடன் பாண்டிய மன்னராம் தந்தையை கொலைகளப் படுத்தி பாண்டிய சிம்மாசனம் ஏறுகிறான் இவரது ஆட்சி துவக்கம் கிபி 860 ஆகும்

ஆனால் இம்மன்னர் இரண்டு ஆண்டு காலமே ஆட்சி செய்துள்ளார்

அய்யம்பாளையம், திருவெள்ளறை, சவந்தினாதபுரம் ஆகிய இடங்களில் கிடைக்கும் இரண்டாம் வரகுணபாண்டியர் கல்வெட்டு  கிபி 863 ல் ஆட்சியதிகாரம் ஏற்றது இரண்டாம் வரகுண பாண்டியன் என்கிறது

இக்கல்வெட்டுகள்

கோன் பராந்தகன் எனும் இவரது தம்பி ஒருவரையும் குறிக்கிறது

ஆக கொலைகளப்பட்ட ஸ்ரீ மாறவல்லபருக்கு

மூன்று மகன்கள் இருந்தனர்

இதில் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்டவர்

இரண்டாம் வரகுண பாண்டியர் என்றாலும்

ஏதோ ஒரு காரணத்தால்
வரகுண பாண்டியரை விரட்டி விட்டு தந்தைய கொன்று
மீதமுள்ள மகன்களில் ஒருவன் ஆட்சியை கிபி 860 ல் கைப்பற்றினாலும்

863 ல் வரகுணர் மீண்டும் சிம்மாசனம் கைப்பற்றுகிறார் அவருடன் மற்றொரு தம்பியான கோன் பராந்தகன் என்பவன் இருந்தான் என்பதும் மேற்கண்ட கல்வெட்டு தரும் தகவல்

இந்த வரலாற்றில் நம் மாணிக்க வாசக பெருந்தகை வருவது

வரகுணர் தம் சகோதரனால் விரட்டியடிக்கப்பட்ட காலம் என்பதை மிகத் தெளிவாக முன் வைக்கிறது

பாண்டிய குலோதயா

என்னும் வடமொழி காவியமும் பெரும்புல்லி என்னும் இடத்தில் கிடைக்கும் கல்வெட்டும்


சிங்கள ஆதரவு பாண்டிய மன்னனால் விரட்டப்பட்ட வரகுணர் வாதவூருக்கு வந்து

அங்கு சிறந்த சிவபக்தராகவும் சாத்திரங்களில் திறம்பட்டவரும் ஆன வாதவூர் நாயகர் என்னும் அந்தணரை
சந்தித்தாக கூறுகிறது

இந்த வாதவூர் நாயகர் வரகுணருக்கு பல அறிவுறைகளை வழங்கி பாண்டிய மன்னர் மீது போர்த் தொடுக்கும் ஆற்றலை உண்டாக்கி பின் மன்னன் வரகுணன் வெற்றி கண்டதாகவும்

பின்னர் வரகுண பாண்டியர் தம்முடைய முதல் அமைச்சர் என்ற இடத்தை வாதவூர் நாயகருக்கு தந்து மகிழ்ந்து போற்றி இருந்ததாகவும் சொல்லுகிறது

 மேலும் இந்த பாண்டிய குலோதையா என்னும் காவியம் நரியை பரியாக்கிய நிகழ்வை குறித்து மகிழ்கிறது

ஆகக் கிபி 863 ல் இருந்த வாதவூர் நாயகரே நரியை பரியாக்கிய வித்தகம் புரிந்த நம் மாணிக்கவாசக பெருந்தகை என்பதும்

அவர் சிவனடியாராக இருந்து பின் பாண்டிய அமைச்சராக இருந்தமை ஆகியவை மேற்கண்ட செய்திகளில் தெளிவாகிறது.

மேலும் வரகுணர் கிபி 866 ல் தம் உடனிருந்த தம்பியாம் கோன் பராந்தகன் என்னும் வீரநாராயணுக்கு பட்டம் கொடுத்து

தான் ஒதுங்கி இருந்து சிவபணி செய்ததாக தளவாய் புர செப்பேடுகள் தெரிவிக்கிறது

எம்கோ வரகுணன் பிள்ளை பிறை சடைக்கணிந்த பிணாகபானி எம்மெருமானை உள்ளத்தில் இனிதிருவி உலகம் காக்கின்ற நாளில்

என்ற செப்பேட்டு வரிகள் வரகுண பாண்டியரது சிவபக்தியையும் எடுத்து காட்டுகிறது

 இதை ஏன் சொல்கிறோம் என்றால்

பாண்டிய வம்சம் கண்ட இரண்டு வரகுண பாண்டியர்களில் முதல் வரகுணர்

பரம வைணவர் என்பது அவர்கால செப்பேடுகளும் கல்வெட்டுகளும் கூறும் உண்மை

ஆக சைவனாக இருந்த வரகுண பாண்டியர் இரண்டாமாவார்

மேலும்

வரகுணனாம் தென்னவன் ஏத்தும் சிற்றம்பலம்

என்றும்

சிற்றம்பலம் புகழும் மயல் ஓங்கு இருங்களியானை வரகுணன்

என்றும் திருக்கோவையாரில் இம்மன்னனையே மணிவாசகர் குறிப்பிடுகிறார்
 மேலும் மாணிக்க வாசகர்

வரங்கிடந்தான் தில்லை அம்பல முன்றிலில் அம்மாயவனே

என்று திருச்சித்திர கூட கோவிந்த ராசரை குறிப்பிடுகிறார்

ஆனால் மூவர் முதலிகள் என்னும் அப்பர் சம்பந்தர் சுந்தரர் மூவரும் தம் பதிகங்களில் எங்கும்

தில்லை முன்றிலில் மாலவன் கிடந்ததாக குறிக்க வில்லை ஏனெனில் இவர்கள் காலத்தில் தில்லையில் திருச்சித்திரக்கூடம் அமையவில்லை

எனில் திருச்சித்திரக்கூடம் அமைத்தது யார்??

 கும்பகோணம் அருகே நந்திபுர விண்ணகரம் எ்னும் திருமால் கோயிலை எழுப்பிய நந்திவர்ம பல்லவர் கிபி 730 ஐ சேர்ந்த நந்தி வர்ம பல்லவர் ஆவார்

 ஏறக்குறைய இதே காலத்தை சேர்ந்த திருமங்கை ஆழ்வார்

பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து புடை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லை திருச்சித்திர கூடம்

என்று பாடுகிறார்

ஆக மாணிக்க வாசகர் வரகுண பாண்டியர் ஆகியோரின் காலத்தி்கு சற்று முன்புதான் நந்திவர்ம பல்லவன் திருச்சித்திரக் கூடம் பணிந்துள்ளான் என்பது தெளிவாகிறது

மேலும் இம்மன்னரையே

நந்திபணி செய்த நகர் நந்தி புர விண்ணகரம் என்று திருமங்கை ஆழ்வார் குறிக்கிறார்

இம்மன்னரே திருச்சித்திரக்கூடம் எழுப்பியதாகவும் வரலாறு தெரிவிக்கிறது
ஞ ஆக இந்த ஆய்வு கருத்தின் சாரம் யாதெனில்

கிபி 863 ல் வரகுண பாண்டியருடன் உடனிருந்த வாதவூர் நாயகர் என்னும் நரியை பரியாக்கிய சைவ அடியாரே மாணிக்க வாசகர் ஆவார்

மாணிக்க வாசகர் இரண்டாம் வரகுணரையும்

திருச்சத்திர கூடத்தையும் திருவாசகத்தில் குறிக்கிறார்

இரண்டம் வரகுணரும் திருச்சித்திரக் கூட கோவிந்த ராசரும்

கிபி 730 ன் நந்தி வர்ம பல்லவருக்கு பிந்தையவர்கள்

ஆக

மாணிக்கவாசக பெருந்தகையாரின் காலம் கிபி 863 என்னும் எட்டாம் நூற்றாண்டு

என்பதாகும்

 இந்த ஆய்வு தவல்களை

தருமபுரம் ஆதீன இணையதளத்தில் வெளியான குடந்தை சேதுராமன் அவர்களின்

நால்வர் காலம்
என்னும் ஆய்வுக் கட்டுரையில் இருந்து தந்துள்ளேன்

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய

தமிழுக்கு தாமதித்த இறைவனும் ஆணையிட்ட அப்பரும்




 திருமறைக்காடு என்னும் இன்றைய வேதாரண்யத்திற்கு   நம் சொற்கோவாம் அப்பரடிகளும் தோணிபுர தோன்றலாம் சம்பந்தப் பெருமானும் இணைந்து எழுந்தருளினர்

அதுசமயம் அகில மறைகள் அனைத்தும் சேர்ந்து பூசித்து மறைக்காட்டு கோயில் வாயில் அடைத்தமையும், அதுமுதல் கதவு திறக்கப் படாமல் மக்கள் புறவாயில் வழியே சென்று இறைவனை வழிபட்டனர் அவ்வூரில்

என்ற செய்தி கேட்டு பெருந்துயர் எய்தினர்

இறைவனை நேரே சென்று காணமுடியாத இந்நிலையை மாற்ற வேண்டும் நாமும் மருங்கு ஒரு வாயில் சென்று வழிபடல் ஆகாது வீரது ஏறு நம் தமிழின் வல்லமையால் திருக்கதவம் திறப்பிப்போம் என்று

சைவத்தின் இருபெரும் மன்னர்களும் முடிவு செய்தனர்

நம் சம்பந்தப் பெருமான் அப்பரடிகளை பணிந்து மூத்தவர் என்கிற முறையில முதல்வழி செய்யப் சொல்லி

நிராமய பரமானந்த நின்மல மூர்த்தியை நேர் இறைஞ்ச நீரே திருக்கதவம் திறக்க பாடும் அப்பரே.

என்று கேட்டு கொண்டார்

அப்பரடிகளும் பெருமானை பணிந்து

 பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ

என்னும் துவக்கத்தினை உடைய பதிகம் பாடினார்

அப்பர் பெருமானுக்கு நிச்சயம் ஒரு உணர்ச்சி பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்

நம் சம்பந்த பிள்ளையார் கதவம் திறக்க பாட சொல்லி விட்டார்

நம் தமிழுக்கு செவி சாய்த்து இறைக்கருணை செய்ய வேண்டுமே என்று எண்ணினார் போலும்

பதிகப் பாடல்தோறும் கதவு திறக்க கோரிக்கை வைக்கிறார் இப்படி

 கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்ம்மினே

நீண்ட மாக்கதவின் வலி நீக்குமே

சட்ட இக்கதவம் திறப்பிம்மினே

பெரிய வான் கதவம் பிரி விக்கவே

தொலைவிலாக் கதவந் துணை நீக்குமே

நோக்கிக் காணக் கதவைத் திறவுமே

இந்த மாக்கதவம் பிணி நீக்குமே

மாறிலாக் கதவம் வலி நீக்குமே

திண்ண மாக்கதவம் திறப்பிம்மினே

என்றெல்லாம் பத்து பாடல்களில் கதவு திறக்க கோரிக்கை வைத்தும் கதவு திறக்கப்பட வில்லை

நிச்சயம் இது அப்பர் பெருமானுக்கு ஒரு சங்கடமான சூழ்நிலைதான்

சம்பந்தப் பெருமான் திறக்க சொல்லி பார்த்துக் கொண்டிருக்கிறார் மக்கள் பார்க்கின்றனர்

தவிர அப்பரடிகள் பெரும்பாலும் பத்து பாடல்களுடன் பதிகத்தை முடித்து விடுவார்

எப்போதாவதுதான் பதினோறாம் பாடல் உருவாகும்

ஆக பத்து பாடலும் முடிந்து விட்டது இன்னும் இருப்பது ஒரே ஒரு பாடல்

அதனுடன் அவர் பதிகத்தை முடித்தாக வேண்டும் கதவு திறந்தாக வேண்டும்

நிச்சயம் இக்கட்டுதான் என்ன செய்வது??

 அப்பரடிகள் தனது ஒவ்வொரு பதிகத்தின் இறுதி பாடலிலும் இராவண கர்வ பங்கத்தை குறிப்பார்

ஆக கதவு திறந்தாலும் திறக்க வில்லை என்றாலும் இத்தோடு பதிகத்தை நிறைவு செய்வது என்று முடிவு செய்து கடைசிப்பாடலை துவங்கும் அப்பரடிகள்

அன்று அரக்கனை விரலால் அடர்த்திட்ட எம்பெருமானே!?  கதவினை திறக்க இத்தனை தூரம் கெஞ்சுகிறேனே நீர் என்ன இரக்கம் இல்லாதவரா??

 உடனே கதவினை சரக்கென்று திற என்று இறைவனையே இரக்கம் இல்லாதவன் என்று உரிமையுடன் சாடி  ஆணையிடுகிறார்

இப்படி

அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர் 
இரக்கம் ஒன்று இலீர் எம்பெருமானிரே 
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக் காடரோ 
சரக்க இக்கதவம் திறப்பிம்மினே

உடனே அடைத்த கதவம் திறக்கிறது, கண்கொள்ளா காட்சி தெரிகிறது

மறைக்காடன் மான்மழுவேந்தி.தோன்றுகிறான்

கண்ட கண்கள் புனல் பாய, களிப்பாய் உள்ளம் கரை புரள, விண்ட மொழியின் நாக்குழற, விம்மி மேணி மயிர் சிலிர்ப்ப, பண்டை வசம் போய் பரவசமாய் பரமானந்த தெளி நரவம் உண்டு மகிழ்ந்தார் அப்பரடிகள்

இறைவனின் பெருங்கருணைத் திறனை வெளிப்படுத்தும் பதிகம் இது

இறைவனை தமிழால் மயக்கி தன்னிலை மறக்க வைத்தது எம் தமிழ் அடைத்த கதவம் திறப்பித்தது எம் தமிழ்

இந்த தமிழை முழுமையாக கேட்கவே இறைனும் கதவு திறக்காமல் காலம் தாழ்த்தினார் என்பார் சேக்கிழார் அதுதான் உண்மையும் கூட

இதே போல சம்பந்தரின் தமிழ் கேட்க அவரிடமும் இறைவன் விளையாட்டு காட்டிய சம்பவம் ஒன்று உண்டு அதனை பிறிதொரு சமயம் காண்போம்

தீபன்ராஜ் வாழ்க்கை
9585756797

நமசிவாய

கண்ணப்பர் பெருமறம்



நம் சைவம் காட்டும் நாயன்மார்களில் மிக மூத்தவர் கண்ணப்பர்

நாயன்மார்கள் தொகுப்புக்கு முன்னரே மக்கள் கண்ணப்பர் கதையை மிகத்தெளிவாக அறிந்துள்ளமைக்கு மிகநிறைய சான்றுகள் உண்டு

நக்கீரர் கண்ணப்பர் பெருமறம் என்ற தனி நூலை படைத்துள்ளார் அவரை பின்பற்றி நம் சேக்கிழார் பெருமான் சொன்ன கண்ணப்பர் கதையின் சுவையான சம்பவங்களை காணுவோம்

காட்டில் பன்றி ஒன்றை துரத்தி  சென்ற திண்ணன் என்று அழைக்கப்பட்ட நம் கண்ணப்பர் அவரது தோழர்கள் காடன் நாணன் உடன் வெகுதூரம் அதாவது
காளத்தி மலையின் அடிவாரத்திற்கு வந்துவிடுகிறார்

களைப்பும் பசியும் சோர்வு செய்த அவர்தம் கண்ணுக்கு குடுமிதேவர் என்று அழைக்கப்படும் சிவலிங்க மூர்த்தம் ஒன்று தென்படுகிறது

 இறைவனது திருமேணி கண்டதும் உள்ளம் உருகி உவப்பெய்தி ஓடிப்போய் அணைத்து தழுவி கொஞ்சி கண்ணீர் பெருக்கி

உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றி கெட்டேன்; இம்மலை தனியே நீர் இங்கு இருப்பதேன்

என்று இறைவன் தனியாய் இருப்பது கண்டு வருந்துகிறார்

 இறைவனது திருமேணியில் வழிபாடு செய்ததற்கான பூ முதலான தடங்கள் இருப்பது கண்டு இந்த நல்ல செயலை செய்தது யார்? என்று வினவ

அதற்கு நாணன் எனும் தோழன் வேதியர் ஒருவர் வந்து பூசை செய்ததை பார்ததுள்ளேன் என்கிறார்

உடனே தானும் அவ்வண்ணமே பூசை செய்ய எண்ணிய திண்ணனார்

பூப்பறிக்க, தண்ணீர் கொள்ள, இறைனுக்கு அமுது செய்ய, செல்ல வேண்டுமே ஆனால் இந்த அழகிய இறைவனை விட்டு என்னால் நீங்கவும் முடியவில்லையே என்று நெக்குருகி விழிநீர் பொழிகிறார்

இறைவனை விட்டு போவதும் பிறகு மீண்டும் வந்து அருகில் அமர்வதுமாக இருக்கும் அவரது செயலை

போதுவார் மீண்டு செல்வார் புல்லுவார் மீளப்போவார் காதலின் நோக்கி நிற்பார்

என்று பதிவு செய்யும் சேக்கிழார்

நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே கோதறத் தெரிந்து வேறு கொண்டிங்கு வருவேன்

என்று திண்ணனார் இறைவனிடம் சொல்லி செல்வதாக காட்சி படுத்துகிறார்

திண்ணனார் பின்னே அவரது தோழர் செல்ல, ஏற்கனவே இவர்கள் துரத்தி வந்து கொன்ற காட்டு பன்றி இறைச்சியை காடன் பக்குவம் செய்யும் இடத்திற்கு வருகின்றனர்

காடன் ஓடி வந்து திண்ணா இறைச்சி நன்கு வெந்து விட்டது சாப்பிட வா!! என்று அழைக்க, அதனை பொருட்படுத்தாத திண்ணனார்

காட்டு மலர்களை இறைவனுக்காக பறித்து தம் தலையில் வைத்து கொள்கிறார்

பிறகு வந்து வெந்த இறைச்சியில் இறைவனுக்கு அமுது செய்ய பதமானது எது என்று  பார்ப்பவராய்

இறைச்சி துண்டுகளை வாயிலிட்டு சுவைபார்த்து நல்லவற்றை கக்கி அம்பில் கோர்த்து கொண்டு பதமில்லாத வற்றை வீசியெறிகிறார் என்பதை

கொழுந்தசை பதத்தில் வேவ வாலிய சுவைமுன் காண்பன் வாயினில் அதுக்கி பார்த்து சாலவும் இனிய எல்லாம் கோலினில் கோத்து காய்ச்சி

என்று எழுதுவார் நம் சேக்கிழார் பெருமான்

மஞ்சனம் ஆட்ட உன்னி மாநதி நன்னீர் தூய வாயினிற் கொண்டு, கொய்த தூநறு பள்ளித்தாமம் குஞ்சி மேல் துதையக் கொண்டு

என்று திண்ணனார் இறைவனுக்கு நீராட்ட வாயில் நீரும் மாலை போட தலையில் பூவும் அமுது செய்ய காட்டு பன்றி இறைச்சியும் கொண்டு சென்ற பாங்கை சொல்கிறது பெரிய புராணம்

இறைவன் மீது ஏற்கனவே சிவகோசாரியார் சாற்றிய பழைய மலர்களை தம் செருப்பு காலால் அகற்றி வாயில் உள்ள நீரை அன்பாக பொழிந்தார் திண்ணனார் என்பதை விளக்கும் வரிகள் இவை:

முடிமிசை மலர் தாளில் வளைத்த பொற் செருப்பில் மாற்றி வாயில் மஞ்சன நீர்தன்னை விளைந்த அன்புமிழ்ந்தார்.

நீராட்டியப்பின் இறைவனை அமுது செய்தருளும் படி ஒரு தாய் பிள்ளையிடம் வேண்டுவது போல குழைவாக இது மிகவும் இனிய இறைச்சி நான் சுவை பார்த்தேன் நாயனாரே!! சாப்பிடும்
என்று திண்ணனார் சொல்வதை

பல்லினால் அதுக்கி நானும் பழகிய இனிமை பார்த்து படைத்த இவ்விறைச்சி சால அழகிது நாயனீரே அமுது செய்தருளும்

என்கிறது பெரிய புராணம்

திண்ணனின் இந்த நிலையை பொறுக்காத உடன் வந்தவர்கள் விலகி போய்விடுகிறார்கள்

இறைவனும் திண்ணனாரும் தனியே இருக்கும் இந்த திருவமுது காட்சியை

அன்னவிம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர்

என்று இறைவன் அமுது செய்தததை கடந்து செல்கிறார் சேக்கிழார். இறைவன் நேரில் வந்து தோன்றினார் என்று குறிக்க வில்லை

அதே சமயம் சிவகோசாரியார் மறுநாள் வந்து அவ்விடத்தை பார்க்கும் போது இறைச்சி எலும்புகள் இலைத் தழைகளுடன் நாய் ஒன்றின் காலடி சுவடு ஒன்றும் காண்பதாக சேக்கிழார் சொல்கிறார்

மகாலிங்க ஐயர் என்னும் ஆய்வாளர் இறைவனுக்கு கண்ணப்பர் வைத்த இறைச்சியை திண்ண வந்த நாய் அது என்கிறார்

ஆனால் நக்கீரர் தம் நூலில் கண்ணப்பர் தம்முடன் ஒரு நாயை வைத்திருந்ததாக கூறுகிறார்

சேக்கிழார் நாயின் காலடியை மட்டும் பதிவு செய்கிறார்

 இவ்வாறாக திண்ணனார் இறைவனை அமுது செய்தபின் அவருக்கு இரவு முழுதும் காவல் இருந்து மறுநாளும் சென்று அதே போல பூசை பொருட்கள் கொண்டு வருகிறார்

இம்முறை இறைச்சியில் தேன் கலந்து எடுத்து வந்து *தேனுடன் கலந்ததிது தித்திக்கும் என மொழிந்து* இறைவனை உண்ண வைக்கிறார்

கண்ணப்பர் இல்லாத சமயம் வந்த சிவகோசாரியார் எலும்பும் சதையுமாக அங்கு தினம் கிடக்கும் கோலத்தை எண்ணி வருந்துகிறார்

இருவரும் மாறி மாறி பூசை செய்ய மனம் வருந்திய சிவகோசாரியாரின் கனவில் தோன்றிய இறைவன்

நீர் வருந்துவது போல இது கொடியவனின் செயல் இல்லை

நம்மீது அன்புடைய அடியவனின் செய்கை. நாளை மறைந்திருந்து பார். என்று அருளி செய்கிறார்

மறுநாள் சிவகோசாரியார் மறைந்திருக்க தம் வழக்கமான பூசை பொருட்களை கொண்டு வரும் திண்ணனாரின முகத்தில் பேரதிர்ச்சி

காரணம் லிங்க திருமேணியில் ஒரு கண்தோன்றி அதில் இரத்தம் ஆறாக பெருகிய வண்ணம் உள்ளது

ஐயோ இது என்ன கொடுமை?? என் தேவா!! தலைவா!! உங்களுக்கு என்ன ஆனது? என்று பதறி தவிக்கிறார்

கொண்டு வந்த பூசை பொருட்கள் தரையில் சிதற விழுகிறார்

*விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது ஒழிந்திடக் காணார்*

என்று திண்ணனார் இறைவனது குருதியை துடைக்க முயன்று தோற்றதாய் கூறும் பெரியபுராணம்.

குருதி நிற்க வில்லையே என்ன செய்வேன்??

இப்படி உம்மை தனியாக விட்டு விட்டு சென்றேனே
என் பெருமானுக்கு இத்தகைய தீங்கை செய்தவன் எவன்??😡

வா முன்னே!! என்று அங்கும் இங்கும் ஓடுகிறார் ஒருவரும் இல்லை கொடிய விலங்குகளும் இல்லை

மீண்டும் நாயனார் தம்பால் வந்து நீடிய சோகத்தோடு நிறை மலர் பாதம் பற்றி மார்புற கட்டி கொண்டு கதறினார் கண்ணீர் வாற

என்று அவர்தம் சோகத்தை பதிவு செய்கிறது பெரியபுராணம்.

எந்தம் பரமானார்க்கு இனி ஆவதுதான் என்ன??

ஆவியின் இனிய எம் ஆண்டவர்க்கு ஆவதென்ன??

மேவினார் பிரியா எம் விமலனார்க்கு ஆவதென்ன??

😭😭😭😭

என்ற குருதி நிற்காமை கண்டு அழுது புலம்பும் அவருக்கு,

முன் எப்போதோ யாரோ சொன்ன முது மொழி நினைவு வருகிறது

*உற்றநோய் தீர்ப்பது ஊணுக்கு ஊண்*

என்பதுதான் அது

அதாவது தமிழர்களின் மிகப்பழைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
(organic replacement)

 அதன்படி இறைவனது பாழ்பட்ட கண்ணில் நம் கண்ணை வைத்தால் சரியாகி விடுமோ என்று அவர் சிந்திக்கவும் நேரம் எடுக்க வில்லை

இறைவனை குணப்படுத்த நல்ல வாய்பபு கிடைத்ததே என்று

*மகிழ்ந்து முன்னிருந்து தன்கண் முதற்சரம் அடுத்து வாங்கி, முதல்வர் தம்கண்ணில் அப்ப, நின்ற செங்குருதி கண்டார்*

என்னும் சேக்கிழார் சொல்கிறார்

 திண்ணனார் கண்ணை தோண்டி லிங்கத்தில் அப்பியதும் குருதி நின்றது என்று

 இறைவன் கண்ணப்பரிடம் காட்டிய சோதனை அதோடு நின்று விடவில்லை

குருதி நின்ற மகிழ்வை கொண்டாடும் முன்னமே அடுத்தக் கண்ணில் இரத்தம் பெருகப் பண்ணினான்

ஆனால் திண்ணனார் இது கண்டு கலங்கவில்லை

கைவசம் தான் இன்னொறு *கண்* மருந்து உள்ளதே இனி கவலை என்ன என்று தம் அன்பின் மிகுதியில் இறைவனை திணற வைக்கிறார் என்பதை

*மண்டும் மற்றிதனுக்கு அஞ்சேன் மருந்து கைகண்டேன் இன்னும் உண்டொரு கண்*

என்று காட்சி செய்கிறது பெரியபுராணம்

 தாமதம் செய்ய வில்லை இந்த கண்ணை தோண்டி விட்டால் இறைவனது புண்ணை காண்பது அரிது என்பதால்

தம் காலைத் தூக்கி குருதி வழியும் கண்ணில் அடையாளம் பதிந்து கொண்டு மற்றொரு கண்ணை தோண்டத்
தயாராகும் பொருட்டு அம்பை கண்ணருகில் கொண்டு சென்றதுதான் தாமதம்

நில்லு கண்ணப்ப

நில்லு கண்ணப்ப

நில்லு கண்ணப்ப

என்று இறைவனின் அமுத வாக்கு மூன்று முறை ஒலிக்க அவனது பாம்பணிந்த திருக்கரம் கண்ணப்பரது கரத்தினை பற்றி தடுத்தது என்பதை

விளக்கும் பாடல் இது

தன் கண் முன் இடக்குங் கையை தடுக்க மூன்று அடுக்கு நாக கங்கணர் அமுத வாக்கு 'கண்ணப்ப நிற்க' என்றே*

இவ்வாறு இறைவனையே திணற வைத்த கண்ணப்பரது அன்பை திளைத்து போற்றாத அருளாளர்களே இல்லை எனலாம்

சேக்கிழார், இவர்தம் பெருமையை உரைக்கும் வல்லர்தான் யார்?? நான் கடவூர் கலய நாயனார் கதை சொல்லப் போகிறேன் என்று விலகிக் கொள்கிறார்

கண்ணப்பர் இறைவனின் வலப்புறம் என்றும் நிற்கும் பதம் பெற்று இறைவனோடு மறைகிறார்

நமசிவாய🙏

தேவாரத்தின் நடுவுள் "திருவைந்தெழுத்து"​


இறைவனது நாமமாகவும் மந்திரமாகவும் இறைவனின் ஒலிவடிவமாகவும் இருப்பது ​ஐந்தெழுத்து​

"​அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி​" என்று சுந்தரர் பெருமானும்

"​துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திடாதே அஞ்செழுத்து ஓதி"​ என்று அப்பர் பெருமானும்

"​துஞ்சலும் துஞ்சல் இல்லாத போதிலும் நெஞ்சகம் நைந்து நினைமின்​" என்று சம்பந்தப் பெருமானும் பல இடங்களில் ​"ஐந்தெழுத்து​" சகல பொழுதுகளிலும் ஓதப்பட வேண்டியது என்று விளக்கியுள்ளார்கள்

இத்தகைய மாட்சிமை பொருந்திய சிவநாமம் ​"யஜீர் வேதத்தின் ஸ்ரீருத்ரம் பகுதியில் நடுவனதாக இடம்பெற்றுள்ளமை"​ பொதுவாக அனைவரும் அறிந்துள்ள தகவல்தான்

இதனையே ​"வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாய வே"​ என்று புகலிவேந்தர் பாடிப்பரவுகிறார் இத்தகைய ஐந்தெழுத்து சைவநெறிக் கருவூலமான ​"தேவாரத்திலும் நடுவனதாக இடம்பெற்றுள்ளது​."

மூவர் முதலிகள் அருளிச்செய்த திருமுறைகள் முதல் ஏழாக வரிசைப்படுத்தப் பட்டுள்ளமையில்

முதல் மூன்றாக சம்பந்தர் தேவாரமும்
இரண்டாம் மூன்றாக அப்பர் தேவாரமும்
ஏழாம் ஒன்றாக சுந்தரர் தேவாரமும் அமைந்துள்ளது.

மூவர் தேவாரத்தில் நடுவனதாக இருப்பது அப்பர் சுவாமிகள் அருளிச் செய்த மூன்று திருமுறைகளாம்

இதில் ​"நான்காம் திருமுறையான சுவாமிகளது திருநேரிசை திருவிருத்த பதிகங்களுக்கும்​"

ஆறாம் திருமுறையான ​"திருத்தாண்டகங்களுக்கும்​" மத்தியில் ஒட்டுமொத்த தேவாரத்தின் நடுவனதாக ​"ஐந்தாம் திருமுறை என்னும் திருக்குறுந்தொகைகளான நூறு பதிகங்கள் இடம்பெற்றுள்ளன​"

​தில்லை திருக்குறுந்தொகை​ முதல் ​பொதுக் குறுந்தொகை​ வரை உள்ள நூறு பதிகங்களில் ​நடுவனதாக ஐம்பத்து ஓறாம் பதிகமாக திருப்பாலைத்துறை குறுந்தொகை​ இடம்பெற்றுள்ளது

பதினோறு பாடல்கள் அடங்கிய ​"நீல மாமணி கண்டத்தார்​" என்று துவங்கும் இப்பதிகத்தின் மையமான ஆறாம் பாடலில் ​சிவாய​ என்ற சூட்சும பஞ்சாட்சரம் இடம்பெற்றுள்ளது

" ​விண்ணி னார் பணிந்தேத்த வியப்புறும்​

​மண்ணினார் மறவாது "சிவாய" என்று​

​எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்​

​பண்ணினார் அவர் பாலைத்துறையரே​ "

என்பது அந்த ​"தெய்வீக அமைப்பு பொருந்திய பாடல்​"

ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் திருப்பாலைத்துறை அர்த்த மண்டபத்தில் நின்று பாடிய ​"அப்பர் சுவாமிகளுக்கும் பின்னாளில் இது தேவாரத் தொகுப்பின் மையத்தில் இடம்பெறப் போகிறது என்பது தெரிந்திருக்காது​"

மூன்று நூற்றாண்டு கழித்து ​திருநாரையூரில் அமர்ந்து பண்வாரியாக தேவாரம் தொகுத்த நம்பியாண்டார் நம்பிகள் இதனை திட்டமிட்டும் செய்திருக்க முடியாது​"

இது "​தேவாரத்தின் மகிமையையும் திருவைந்தெழுத்தின் சிறப்பையும் உணர்த்த சிவபரம்பொருள் போட்டு வைத்த கணக்கு​

சிவாயநம

​தீபன்ராஜ் வாழ்க்கை​
9585756797